கோவை : தமிழகத்திற்கு ரெட் அலார்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், வரும் 7-ம் தேதி திட்டமிட்டபடி பனைத்திணை திருவிழா நடைபெறும் என அதன் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
கோவை : தமிழகத்திற்கு ரெட் அலார்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், வரும் 7-ம் தேதி திட்டமிட்டபடி பனைத்திணை திருவிழா நடைபெறும் என அதன் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சியினால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், அதன் பிறகு மேலும் 3 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் வரும் 7-ம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுமார் 25 செ.மீ அளவு மழை பெய்யும் என பேரிடர் மேலாண்மைத்துறை அறிவித்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, அக்., 7-ம் தேதி கோவையில் ஒரு லட்சம் பனைவிதைகளை விதைக்கும் நிகழ்ச்சிக்கு பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ரெட் அலார்ட் காரணமாக இந்த பனைதிணை திருவிழா நடைபெறுமா..? என்ற சந்தேகமும், கேள்வியும் சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்களிடையே ஏற்பட்டது.
இந்த நிலையில், வரும் 7-ம் தேதி திட்டமிட்டபடி பனைத்திணை திருவிழா நடைபெறும் என அதன் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும், அவர்கள் கூறியிருப்பதாவது :- வடகிழக்கு பருவமழையினை கருத்தில் கொண்டே அக்., 7-ம் தேதியன்று இலக்கு வைக்கப்பட்டு மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் விதைகள் சேகரிக்கப்பட்டு வார களப்பணிகளின் போது பிரித்து தயார் செய்யப்பட்டது. அக்.,7 வரை மழை தொடரும் என்ற வானிலை ஆய்வு மைய அறிவிப்பைக் கருத்தில் கொண்டு, இந்த வாரத்தொடக்கத்தில் (செப்.,30 முதல்) இருந்தே தன்னார்வலர்கள் திட்டமிட்ட இடங்களில் பனை விதைகளை நடும் பணிகளை தொடங்கி விட்டனர். இதுவரையிலும் 60,000 விதைகளுக்கு மேல் நடப்பட்டு விட்டன.
மேலும், இன்றும், நாளையும் (அக்.,5 மற்றும் அக்.,6) களப்பணியில் ஈடுபட்டு எடுத்துக்கொண்ட இலக்கை நெருங்கியும் விட உத்வேகத்துடன் ஈடுபட உள்ளனர். இதில், அந்தந்த பகுதிகளில் உள்ள தன்னார்வலர்கள் கலந்து கொண்டு உதவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும், வரும் 7-ம் தேதி காலை (7.00 - 9.30) திட்டமிட்டபடி கோளாரம்பதி மற்றும் புதுகுளத்தில் (பேரூரில் இருந்து வேடப்பட்டி செல்லும் சாலை) 1,000 பனை விதை விதைக்கும் பணிகளும் மற்ற இடங்களிலும் களப்பணி இருக்கும், இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும், தனியார் வானிலை ஆலோசர்களின் யோசனைப்படி, மிதமான மழைப்பொழிவே இருக்க வாய்ப்புள்ளதாகவும், பெரும் மழை வந்தால் மட்டுமே களப்பணி நிறுத்தப்படும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.