கோவை : மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தொடுதிரை புகார் அளிக்கும் வசதியை, அனைத்து மண்டல அலுவலகங்களிலும் உருவாக்கிட வேண்டும் என்ற கோரிக்கை புகார் அளிக்க வரும் பொதுமக்கள் மத்தியில் வலுத்துள்ளது.
கோவை : மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தொடுதிரை புகார் அளிக்கும் வசதியை, அனைத்து மண்டல அலுவலகங்களிலும் உருவாக்கிட வேண்டும் என்ற கோரிக்கை புகார் அளிக்க வரும் பொதுமக்கள் மத்தியில் வலுத்துள்ளது.
குடிநீர் விநியோகம், சாலை பராமரிப்பு, தெருவிளக்கு பிரச்சினை, தெருநாய் தொல்லை, பூங்கா பராமரிப்பு மற்றும் துப்புரவு போன்ற மாநகராட்சி பணிகளில் உள்ள குறைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மனுக்களாக அனுப்பியும், நேரில் சென்று வழங்கியும் வருகின்றனர்.
அதிகாரிகளை நேரில் சந்திக்க பலமணி நேரம் மனுதாரர் காத்திருக்க வேண்டியுள்ளதால், மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறுஞ்செய்தி சேவை மற்றும் வலைதளம் மூலமாக புகாரளிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 9 மாதங்களில் குறுஞ்செய்தி மூலமாக 1,680 புகார்களும், வலைதளத்தில் 1,500 புகார்கள் என மொத்தம் 3,180 புகார்கள் பதியப்பட்டுள்ளன. இவற்றில் 2,850 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், கடந்த ஜனவரி மாதம் கோவை மாநகராட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'சிட்டிசன் செயலி' மூலமாக 950 புகார்கள் இதுவரை பதியப்பட்டுள்ளன.
வார்டு எண், வீட்டு முகவரி, புகாரின் தன்மை, புகார் குறித்த படங்களை இந்த செயலில் பதிவு செய்ததும், புகார் எண் மற்றும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் குறித்த தகவல் தெரிவிக்கப்படுகிறது. பதியப்படும் புகார்களில் தெருவிளக்கு, சாக்கடை அடைப்பு மற்றும் குடிநீர் கசிவு சம்பத்தப்பட்டவை இரண்டு முதல் ஐந்து நாட்களுக்குள் சரி செய்யப்படுவதாகவும், கட்டிட லேஅவுட் அனுமதி மற்றும் சான்றிதழ்கள் தொடர்பான புகார்கள் ஒரு மாதத்திற்குள் சரிசெய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல, கடந்த ஜூன் மாதம், மாநகராட்சி பிரதான அலுவலகத்தின் தகவல் மையத்தில், தொடு திரை வசதியில் புகார் அளிக்கும் கருவிகளை மாநகராட்சி நிர்வாகம் நிறுவியது. இந்த வசதியைப் பயன்படுத்தி மனுதாரர்கள் மிகக் குறைந்த நேரத்தில் வெகுவிரைவாக புகார் அளித்து செல்கின்றனர். புகார் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது. இதனால், அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் உள்ள இணைப்பு அதிகமாகியுள்ளதாகக் கருதப்படுகிறது.
இதேபோல, அனைத்து மண்டல அலுவலகங்களிலும் தொடுதிரை கருவிகள் பொருத்தப்பட்டால், மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிப்பது எளிதாகிவிடும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

"புகார் அளிக்க வருபவர்கள் பெரும்பாலும் மாநகராட்சி பிரதான அலுவலகத்திற்கு வருவதில்லை, அந்தந்தப் பகுதியில் உள்ள மண்டல அலுவலகங்களுக்கு மட்டுமே செல்கின்றனர். புகார் மனுவை அளிக்கவும், திட்டங்கள் குறித்த விளக்கங்களை பெறுவதற்கும் பலமணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், மற்ற வேலைகளுக்கு செல்ல முடியவில்லை. சில நாட்களில் ஒரு நாள் முழுக்க மாநகராட்சி அலுவலகத்திற்குள் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, பிரதான அலுவலகத்தில் உள்ளதைப் போல் தொடுதிரை கருவியில் புகார் தெரிவிக்கும் வசதியை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் மாநகராட்சி நிர்வாகம் நிறுவ வேண்டும்," என்று கூறுகிறார் மத்திய மண்டலத்திற்கு புகார் அளிக்க வந்த விக்னேஷ்.
இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்தபோது, மாநகராட்சியின் ஐந்து மண்டல அலுவலகங்களிலும் தொடுதிரை கருவியில் புகார் தெரிவிக்கும் வசதிகள் நிறுவ திட்டமிட்டிருப்பதாகவும், விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.