திருப்பூர் : பணம் கொடுக்கல் வாங்கல் தகராற்றில் சக நண்பர்களுடன் சேர்ந்து நண்பரைக் கொலை செய்த மளிகை கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் : பணம் கொடுக்கல் வாங்கல் தகராற்றில் சக நண்பர்களுடன் சேர்ந்து நண்பரைக் கொலை செய்த மளிகை கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
மானூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (26). இவர் ஊத்துக்குளி மற்றும் காங்கேயம் பகுதிகளில் தேங்காய் எண்ணெய் மில் வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை ஊத்துக்குளி ரெட்டைக்கிணறு பகுதியில் உள்ள ஆயில் மில்லுக்கு சென்ற இவர், இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அச்சமடைந்த அவரது தந்தை திருமலைசாமி (பாஜக ஒன்றிய செயலாளர்) ஆனந்தின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்துள்ளார். ஆனால், அவரது மொபைல் அணைத்து வைக்கப்பட்டிருந்தால் ஊத்துக்குளி ஆயில் மில்லுக்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது, அங்கு பணியில் இருந்தவர்கள் காரில் வந்த நண்பர்களுடன் ஆனந்த் தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுவிட்டதாகத் தெரிவித்தனர். இதனால், சந்தேகமடைந்த திருமலைசாமி ஊத்துக்குளி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஆயில் மில்லில் இருந்து ஆனந்தின் வீட்டிற்கு செல்லும் வழியில் இருக்கும் புதரில் இருந்து ஆனந்தின் இருசக்கர வாகனத்தை போலீசார் மீட்டனர்.
இதனையடுத்து, அவரது வீட்டின் அருகே சென்று விசாரிக்க முற்பட்ட போது, அந்தப் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் பாலகுரு என்பவர் வெளியே நிற்பதைக் கண்டு அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது, பாலகுரு முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகத்தின் பேரில் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், பாலகுருவுக்கும், ஆனந்திற்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்தது தெரிய வந்தது.

எனவே, ஆனந்தை கொலை செய்ய திட்டமிட்டு, அவர்களது நண்பர்கள் இருவரின் உதவியுடன் அவரை பாலகுருவின் வீட்டிற்கு வலுக்கட்டாயமாகத் தூக்கி வந்து தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, போலீசாரிடம் இருந்து தப்பிக்கும் விதமாக வீட்டை சுற்றிலும் மிளகாய் பொடியை தூவி விட்டு கூலிப்படையினரை தனது ஆம்னி வேனில் அனுப்பி வைத்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது-
இதனையடுத்து, ஆனந்தின் உடலை மீட்டு தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்ட போலீசார், உடலை திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், திருப்பூர் புதிய பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த பாலகுருவின் காரை பறிமுதல் செய்த போலீசார் நண்பர்களை தேடி வருகின்றனர்.
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஆயில் மில் அதிபரான நண்பரை மளிகை கடைக்காரர் சக நண்பர்களை வைத்தே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது