திருப்பூர்: திருப்பூர் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கடத்திச் சென்ற வடமாநில தம்பதியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கடத்திச் சென்ற வடமாநில தம்பதியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருவம்பாளையம் பகுதியில் ஒடிசாவைச் சேர்ந்த புத்தாதேவ் பட்டாயத் – பேபிராணி பட்டாயத் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த இவர்களது ஒன்றரை வயது குழந்தை உதய்நாராயணனை திடீரென காணவில்லை. இது குறித்து தகவலறிந்த பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். அப்போது, அதே பகுதியில் வசித்து வந்த ஒருவர்தான் குழந்தையை தூக்கிச் சென்றதாக அங்கு விளையாடிக் கொண்டிருந்த வேறொரு சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அங்கிருந்த பலரின் புகைப்படங்களைக் காட்டியதில் ஒடிசாவைச் சேர்ந்த சண்கர்ஷன் சேத்தி என்பத தெரிய வந்தது. இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் தனது மனைவி சுசித்ராவுடன் வீட்டை காலி செய்து கோவையிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார் என்பதை அறிந்த புத்தாதேவ் உடனடியாக மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, அவர்களின் புகைப்படத்தை கொண்டு விசாரணை மேற்கொண்ட போலீசார், கோவை செட்டிப்பாளையம் பகுதியில் தங்கியிருந்த சண்கர்ஷன் சேத்தியின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, புத்தாதேவின் குழந்தை உதய்நாராயணனை கடத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து, வடமாநில தம்பதியரை கைது செய்த போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், இருவரிடமும் விசாரணை மேற்கொண்டதில் குழந்தை பாக்கியம் இல்லாத நிலையில், திருப்பூரில் முன்பு குடியிருந்த போது அங்கு விளையாடி வந்த குழந்தை உதய்நாரயணன் மீது சண்கர்ஷன் சேத்தி ஆசையாக இருந்ததாகவும், இதனால் திருப்பூர் சென்று குழந்தையை கடத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். குழந்தையை காணவில்லை என கொடுத்த புகாரில் ஒரே இரவில் குற்றவாளிகளை பிடித்து குழந்தையை மீட்ட துணை ஆய்வாளர் காளிமுத்து தலைமையிலான போலீசாருக்கு மாநகர துணை காவல் ஆணையாளர் உமா பாராட்டு தெரிவித்தார்