கோவை : கோவையில் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நகரின் சாலைகள் அனைத்தும் சேறும், சகதியுமாக காட்சியளிக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை தினம்தோறும் சந்திந்து வருவதாக புகார்கள் குவிந்து வண்ணம் உள்ளன.
கோவை : கோவையில் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நகரின் சாலைகள் அனைத்தும் சேறும், சகதியுமாக காட்சியளிக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை தினம்தோறும் சந்திந்து வருவதாக புகார்கள் குவிந்து வண்ணம் உள்ளன.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த வாரம் முதல் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பொழிவின் அளவு நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. இந்நிலையில், பருவ மழை தீவிரம் அடையும் முன்பே நகரின் பெரும்பாலான சாலைகளும், குறுக்கு சாலைகளும் சேறும், சகதியுமாக மாறியுள்ளன.

அவினாசி சாலை, திருச்சி சாலை மற்றும் மேட்டுப்பாளையம் சாலை போன்ற கோவை மாநகரின் பிரதான சாலைகளின் சில பகுதிகள் மிகவும் மோசமாக சேதம் அடைந்திருப்பதால், மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால், இரவு நேரங்களில் பிரதான சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

குறிப்பாக, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியின் பிரதான சாலை முழுக்க மழைநீர் தேங்கி, குளம் போல சுமார் 1 கி.மீ. நீளத்திற்கு வெள்ளம் தேங்கிவிடுகிறது. இதனால், பலமணி நேரம் இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதேபோல, அவினாசி சாலையை ஒட்டி அமைந்துள்ள உடையம்பாளையம் சாலையை சீரமைக்க வேண்டி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இருப்பினும், மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்காததால், தற்போது அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சகதியில் வழுக்கி விழும் நிலை உருவாகியுள்ளது. கார்கள் அவ்வப்போது ஆழமான குழிகளுக்குள் சிக்கிக் கொள்கின்றன என அப்பகுதியினர் புகார் அளிக்கின்றனர்.

மேலும், கரும்புக்கடை, சுந்தராபுரம், தொண்டாமுத்தூர், வடவள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள இணைப்பு சாலைகள் அனைத்தும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையிலான ஆபத்தான குழிகளாக மாறியுள்ளன. மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்குவதோடு, தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள மழைநீர் கழிவுநீரோடு கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன.

காமராஜபுரம், சங்கனூர் சாலை, காந்திமா நகர், கள்ளிமடை, ரத்தினபுரி, செல்வபுரம் மற்றும் போத்தனூர் சாலையில் அமைந்துள்ள திருமறை நகர், மதினா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடுவதால், இப்பகுதி மக்கள் பல்வேறு சுகாதார சீர்கேடுகளை சந்தித்து வருகின்றனர்.
மழையால் ஏற்படும் பாதிப்புகளை அலுவலர்களிடம் தெரிவிக்க பிரத்தியேக தொலைபேசி எண்களும், முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினாலும், பருவமழை தொடங்கும் முன்பே தார் சாலைகளை சீர் செய்து, மழைநீர் வடிகால்களை முறையாகப் பராமரித்திருந்தால் மழையால் பொதுமக்களுக்கு ஏற்பட்டு வரும் பிரச்சினைகள் குறைந்திருக்கும் என்கின்றனர் பெரும்பாலானோர்.