தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரலாறு காணாத அளவில் மழை பெய்யும் என தற்போது வாட்ஸ் அப்பில் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரலாறு காணாத அளவில் மழை பெய்யும் என தற்போது வாட்ஸ் அப்பில் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 7-ம் தேதியன்று அதிதீவிரமான கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இது, தமிழகத்தில் உள்ள மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சென்னை மீண்டும் வெள்ள நீரால் மூழ்கும் அபாயம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் சென்னைவாசிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த மழை அறிவிப்பு குறித்து குறித்து தனியார் வானிலை ஆய்வு அமைப்பான 'தமிழ்நாடு வெதர்மேன்' தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 7-ம் தேதி அதிதீவிர கனமழை பெய்யும் என ரெட் அலார்ட் விடுத்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் மழை அளவு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மிக அதி தீவிர கனமழையாக 204.5 மி.மீ., அளவுக்கு 75 சதவீதம் கண்டிப்பாக மழை உண்டு என்ற நிலையில் இந்த ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.
உண்மையில் தமிழகம் முழுவதும் ஒரே நாளில், 204.5 மி.மீ., மழை பொழிவு இருக்க வாய்ப்பு இல்லை. மேலும், சென்னையில் மிக கன மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. அதற்குள் வதந்திகளைப் பரப்பி விடுகின்றனர். ரெட் அலர்ட் விடுக்கப்பட்டால்,அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். ஒரு மாவட்டத்தில், 10 மழை அளவீடு மையங்கள் இருந்தால், அந்த மாவட்டம் முழுவதும் 204.5 மி.மீ., மழை பெய்யுமா என பார்க்க வேண்டும். குறிப்பிட்ட மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்தால் சமாளித்து விடலாம்.
தமிழகத்தில் எந்த பகுதியில் மிக தீவிர கனமழை பெய்யும் என்பதைக் கூறாமல், பொதுவாக ரெட் அலர்ட் விடுத்தால், என்ன நடவடிக்கை எடுக்க முடியும். கிருஷ்ணகிரியில் குறைந்த அளவு மழை பெய்தால் அங்கு என்ன நடவடிக்கை எடுத்து விட முடியும்.
ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரை ஒட்டிய தமிழக பகுதிகளான நீலகிரி, கோவை (வால்பாறை) தேனி, நெல்லை, மற்றும் கன்னியாகுமரியில், தினமும் 200 மி.மீ., அளவுக்கு மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக கன மழை பெய்தது. சோலையாறு அணை பகுதியில் 24 மணி நேரத்தில் 400 மி.மீ., மழை பெய்தது. அப்போது அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது ஏன் வதந்திகள் வைரலாகி வருகின்றன..?
தமிழகத்தின் கடலோர பகுதியில் இருந்து வெகு தொலைவில் அரபிக்கடலில் புயல் சின்னம் உருவானால், அது கிழக்கில் இருந்து வரும் காற்றை வலுப்படுத்தும். அதன் காரணமாக மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு கனமழை பெய்யும்.
கடந்த 2009-ம் ஆண்டு நீலகிரியின் கேத்தி பகுதியில் ஒரே நாளில் 820 மி.மீ., மழை பெய்தது. குறிப்பாக, குன்னூர் பகுதியில் கனமழை பெய்தது. ஆனால், தற்போது உருவாக உள்ள புயல் சின்னம் 2009-ம் ஆண்டு போல் இல்லாமல் வெகு தொலைவில் தான் உருவாக உள்ளது. அது ஓமன் நாட்டை நோக்கி நகருவதால், கேரளா மற்றும் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. எனினும், தமிழகத்தின் மலை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு இருக்க வேண்டும்.
தமிழக முழுவதும் எச்சரிக்கை தேவையில்லை. குறிப்பாக, சென்னைக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனவே, இந்த ரெட் அலார்ட் சென்னைக்கு உரியது அல்ல. தமிழகத்தின் மலைப் பகுதிகளுக்கு உரியது. எனவே, முன்பு டிச., 1ம் தேதி போல பேய் மழை பெய்யும் எனப் பயப்பட வேண்டாம். மலைப் பகுதிகளில் கனமழை பெய்யலாம். எனினும், கடந்த ஆகஸ்ட் மாதம் நீலகிரி, கன்னியாகுமரி, வால்பாறை அல்லது பெரியாறு போன்ற பகுதியில் பெய்தது போல் இருக்காது. சென்னைக்கு மழை தேவை. வெள்ளம் என்பது வேறு விஷயம். ஒவ்வொரு எச்சரிக்கைக்கும் பயப்பட வேண்டாம். சென்னைக்கு குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளில் போதிய நீர் இருப்பு இல்லை,
ரெட் அலார்ட் குறித்து தொலைக்காட்சிகளில் வரும் செய்திகள் வெறும் டி.ஆர்.பி.க்காக மட்டுமே. அதேபோல, வாட்ஸ் அப்பில் பரவும் செய்திகளைக் கண்டு சென்னைவாசிகள் பயப்பட வேண்டாம், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.