கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் பொதுமக்களின் வீடுகளில் 'டெங்கு கொசுப்புழு இல்லா வீடு' என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களை மாநகராட்சி நிர்வாகம் ஒட்டி வருகின்றது.
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் பொதுமக்களின் வீடுகளில் 'டெங்கு கொசுப்புழு இல்லா வீடு' என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களை மாநகராட்சி நிர்வாகம் ஒட்டி வருகின்றது.
வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழைக் காலங்களில் பரவும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்க கோவை மாநகராட்சியின் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியிருப்பு பகுதிகளில் டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுப்புழு உருவாவதைத் தடுப்பது குறித்த தகவல்களை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு முகாம்களை மாநகராட்சி அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாநகராட்சி பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக ஏற்படும் பகுதிகளை கண்காணித்து, காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மாநகராட்சி ஐந்து மண்டலங்களுக்கும் 'டெங்கு கொசுப்புழு இல்லா வீடு' என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. டெங்கு கொசு ஒழிப்பில் சிறப்பாக ஒத்துழைக்கும் குடியிருப்புகளில் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து கோவை மாநகராட்சியின் நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார் கூறுகையில், "டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுப்புழுக்கள் பயன்படுத்தாத டயர், தேங்காய் மூடி, பிளாஸ்டிக் குவளை போன்ற பொருட்களில் தண்ணீர் தேங்கும்போது உருவாகின்றது.

இதுபோன்ற பொருட்களை அப்புறப்படுத்தி தண்ணீர் தேங்காமல், சுகாதாரமான முறையில் குடியிருப்பை பராமரிப்பவர்களின் வீட்டு வாசலில் டெங்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகிறது. சுத்தமாக பராமரிக்காதவர்களிடம் அபராதம் வசூலிப்பதுபோல், டெங்கு ஒழிப்பில் சிறப்பாக ஒத்துழைக்கும் பொதுமக்களை ஊக்குவிப்பதற்காக இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகிறது." என்றார்.
ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், கணபதி ஆகிய பகுதிகளில் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றது. மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட டாடா பாத் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவை கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்து, டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார்.