கோவை : கோவை புறநகரில் உள்ள மலைக் கிராமங்களில் பசுமை வீடுகள் கட்டி தருவதில் அதிகாரிகள் மெத்தனப் போக்கில் செயல்படுவதால், தூமனூர் உள்ளிட்ட கிராம மக்கள் தங்குவதற்கு வீடுகளின்றி தவித்து வருகின்றனர்.
கோவை : கோவை புறநகரில் உள்ள மலைக் கிராமங்களில் பசுமை வீடுகள் கட்டி தருவதில் அதிகாரிகள் மெத்தனப் போக்கில் செயல்படுவதால், தூமனூர் உள்ளிட்ட கிராம மக்கள் தங்குவதற்கு வீடுகளின்றி தவித்து வருகின்றனர்.

கோவை மாநகரில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் தூமனூர், செம்புக்கரை மற்றும் காட்டுசாலை ஆகிய 3 மலைக் கிராமங்கள் உள்ளன. தடாகம் வனக் கோட்டத்திற்குட்பட்ட இந்தப் பகுதிகளில் மொத்தம் 127 ரேசன் அட்டைகளைக் கொண்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் கூட்டுக் குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ள நிலையில், தூமனூர் மலைக் கிராமத்தில் கடந்த 2016-ம் ஆண்டு 42 பசுமை வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. பின்னர், மேலும் 2 பயனாளிகள் இந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.
பசுமை வீட்டுத்திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 2.1 லட்சம் பயனாளிகளுக்கு பல்வேறு கட்டங்களாக நேரடியாக வழங்கப்படும். கடந்த 2016-ம் ஆண்டு பசுமை வீட்டுப் பணிகளுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், 3 கிராமங்களை சேர்த்தும் இதுவரை ஒரு வீடு கூட கட்டி முடிக்காதது மலை கிராம மக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

பெரும்பாலான வீடுகள் மேற்கூரை இல்லாமலும், ஒருசில வீடுகள் பேஸ்மென்ட் மட்டுமே போடப்பட்டுள்ள நிலையில் இருக்கிறது. மேலும், பலரது குடியிருப்புகளை காலி செய்துவிட்டு, அருகில் உள்ள உறவினர்களின் வீடுகளில் குடியேறியுள்ளனர். உரிய நேரத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்காததால் அவர்கள் பெருத்த இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இது குறித்து 57 வயதான தூமனூர் கிராமவாசி மயிலான் கூறுகையில், "யானை உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமங்களின் அருகாமையிலையே சுற்றித் திரிவதால், ஆபத்தான சூழல் உருவாகிறது. ஒருசிலர் டெண்ட்களை அமைத்து தங்கி வருகின்றனர். அவற்றை யானை போன்ற விலங்குகள் எளிதில் கிழித்து விடுகின்றன. மேலும், கனமழைக்கும் அந்த டெண்ட்கள் தாங்குவது இல்லை," என்றார்.

மற்றொரு குடியிருப்புவாசி கூறியதாவது :- குக்கிராமங்களில் வனத்துறையினரால் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் பாதி கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டுமானங்கள் தரமில்லாத பொருட்களால் கட்டப்பட்டுள்ளது, என்றார்.
இது தொடர்பாக கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., வி.சி. ஆறுக்குட்டி சிம்ப்ளிசிட்டியிடம் கூறுகையில், "பசுமை வீட்டுக்காக வழங்கப்படும் பணத்தினை பயனாளிகள் எடுத்துப் பயன்படுத்தி விடுகின்றனர். எனவே, இந்தத் திட்டம் தாமதமாகியுள்ளது. கிராம மக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்கும்பட்சத்தில் இத்திட்டம் விரைந்து முடிக்கப்படும்," என்றார்.

பொதுமக்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே இல்லாத புரிதலே பசுமை வீடுகள் கட்டுவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, இது தொடர்பாக மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ் கூறுகையில், "பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகள் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக முடிக்கப்படும். குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்படும் இடங்கள் வனப்பகுதியின் நடுவே அமைந்திருப்பதால், அங்கு சென்றடைவதில் சிக்கல் ஏற்படுகிறது. அரசு வழங்கும் பணத்தைவிட வீடு கட்டுவதற்கு அதிகளவில் பணம் தேவைப்படுவதால், ஒருசில தனியார் நிறுவனங்களின் உதவிகளை கோரியுள்ளோம், என்றார்.
