நீலகிரி : மசினக்குடி அருகே சுற்றுலாவிற்கு வந்தவர்களின் கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
நீலகிரி : நீலகிரி : மசினக்குடி அருகே சுற்றுலாவிற்கு வந்தவர்களின் கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகைக்கு சென்னையைச் சேர்ந்த 7 இளைஞர்கள் கார் மூலம் நேற்று சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் நேற்றுமுன்தினம் இரவு டிரக்கிங் செல்வதாகக் கூறி தங்கியிருந்து விடுதியில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினக்குடி வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். நேற்று மாலை வரை அவர்கள் மீண்டும் திரும்பாததால், விடுதியின் ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மாயமானவர்களை வனத்துறை அதிகாரிகள் தேடிச் சென்றனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த அவர்களின் கார், கல்லட்டி 27-வது கொண்டை ஊசி வளைவில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. பின்னர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர். அப்போது, ரவிவர்மா, இப்ராகிம், ஜெயகுமார், அமர்நாத், ஜுட் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். எஞ்சிய ராமா ராஜேஷ் மற்றும் அருண் ஆகிய இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ராமா ராஜேஷ் மேல்சிகிச்சைக்காக கேஜி மருத்துவமனைக்கும், மற்றொருவரான அருண் கோவை அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். இதனிடையே, விபத்து நடைபெற்ற பகுதியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று பார்வையிட்டார்.
நீலகிரியில் 2-வது சீசன் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விபத்து நடைபெற்ற கல்லட்டி பகுதியில் வாகனத்தின் வேகம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் சாலையில் பொருத்தப்பட்டன. மேலும், வாகன ஓட்டிகள் விழிப்புடன் வாகனத்தை இயக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி. சண்முகப்பிரியா அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.