கோவை: மகாத்மா காந்தியின் பிறந்தநாளை ப்ரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில், 'ப்ரூக்பீல்ட்ஸ் காதி' தினம் கொண்டாடப்பட்டது.
கோவை: மகாத்மா காந்தியின் பிறந்தநாளை ப்ரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில், 'ப்ரூக்பீல்ட்ஸ் காதி' தினம் கொண்டாடப்பட்டது.
இளைய தலைமுறையினருக்கு கதர் ஆடைகளை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி இன்று மாலை ப்ரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் நடைபெற்றது.

காதி கிராமோத்யோக் பவன் மற்றும் பி.எஸ்.ஜி கல்லூரியின் பின்னலாடை வடிவமைப்புத்துறை இணைந்து தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில் கதர் ஆடைகள், கதரால் தயாரிக்கப்பட்ட ஆபரணங்கள் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சி குறித்து ப்ரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தின் வணிக மேலாளர் சுஜாதா கூறுகையில், "கதர் நமது கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்தது. இளைஞர்கள் மத்தியில் கதர் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. நாம் அதிக அளவில் கதர் பொருட்களை பயன்படுத்த வேண்டும்." என்றார்.

இது குறித்து, கோவை வடக்கு சர்வோதயா சங்கத்தின் முன்னாள் செயலாளர் தண்டாயுதம் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசுகையில், "கதர் நமது சுதந்திர போராட்டத்தின் அடையாளம். விவசாயம் இல்லாத காலத்தில் விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக அமையும் என்பதாலேயே கதர் தொழிலை நமது கிரமங்களில் காந்தியடிகள் அறிமுகப்படுத்தினார். இன்றும் தமிழகத்தில் 25,000-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்." என்றார்.

இந்த நிகழ்ச்சி, பி.எஸ்.ஜி கல்லூரியின் மாணவர்களுக்கு அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த வழிவகை செய்தது. இது குறித்து மாணவி வர்ஷிதா பிரகாஷ் கூறுகையில், "இது ஒரு நல்ல வாய்ப்பு. எங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர உந்துதல் அளித்தது. கதர் மூலம் தயாரிக்க முடியாத பொருட்களையும், நாங்கள் தற்போது தயாரித்து வைத்துள்ளோம்." என்றார்.

மற்றொரு மாணவி ஷிபானா ரூஸ் கூறுகையில், "கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காதி கிராமோத்யா மூலம் நாம் கதர் பொருட்களை வாங்கினோம். இது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒரு பொருள்." என்றார்.
தொடர்ந்து, இன்று ப்ரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்திற்கு கதர் ஆடைகள் அணிந்து வந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.
