கோவை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காதி கிராப்டில் தீபாவளி சிறப்பு விற்பனையை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.
கோவை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காதி கிராப்டில் தீபாவளி சிறப்பு விற்பனையை கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று தொடங்கி வைத்தனர்.
அண்ணல் காந்தியடிகளின் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவை அவிநாசி மேம்பாலம் அருகில் உள்ள காதி கிராப்ட் அலுவலகத்தில் தீபாவளி சிறப்பு அதிரடி விற்பனை இன்று முதல் தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார். விழாக் கால சலுகையாக அனைத்து பொருட்களுக்கும் 30% தள்ளுபடி விற்பனையாக அளிக்கப்பட்டது. இந்தத் தொடக்க விழாவில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன்.அர்ஜூனன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிசந்திரன், வடக்கு வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் இது குறித்து உதவி இயக்குனர் சுரேஷ் கூறுகையில்," கடந்த ஆண்டு கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ரூ. 1.52 கோடி விற்பனை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இலக்கைக் கடந்து ரூ. 1.53 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு ரூ. 2.53 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போல நடப்பு ஆண்டிற்கும் மத்திய, மாநில அரசுகள் கதர், பட்டு, பாலியஸ்டர், உல்லன் பொருட்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை அளித்துள்ளன," என்றார்.

இதைத் தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகள் இருவருக்கு மரியாதை செய்யப்பட்டு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
இதே போல், உதகை உதகையில் இயங்கி வரும் கதர் அங்காடியில் காந்தியடிகளின் பிறந்தநாள் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.
கடந்தாண்டு உதகையில் ரூ.45.96 இலட்சம் மதிப்பிற்கு கதர் விற்பனை செய்யப்பட்டதை போல் இந்தாண்டும் 72 லட்சம் விற்பனை செய்ய மதிப்பிடப்பட்டுள்ளது.