கோவை: சிறுவாணி அணைக்கு செல்லும் வழியில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற முதியவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய கும்பலை வனத்துறையினரும், போலீசாரும் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை: சிறுவாணி அணைக்கு செல்லும் வழியில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற முதியவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய கும்பலை வனத்துறையினரும், போலீசாரும் வலைவீசி தேடி வருகின்றனர்.
போலுவாம்பட்டி, கோவை குற்றால வனப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஏராளமான சந்தன மரங்கள் உள்ளன. இந்த மரங்களை கடந்த சில நாட்களாக மர்ம ஆசாமிகள் வெட்டி கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனத்துறையினர் அங்கு உள்ள வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சிறுவாணி அணைக்கு செல்லும் சாலையில் உள்ள இரும்பு பாலம் அருகே வனப்பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினருக்கு மரம் வெட்டும் சத்தம் கேட்டது.
இதனால் உஷார் அடைந்த அவர்கள் சத்தம் வந்த திசையை நோக்கி நடந்து சென்றனர். அப்போது அங்கு 6 பேர் கொண்ட கும்பல் சந்தன மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். அந்த கும்பலை வனத்துறையினர் சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் வனத்துறையினரைக் கண்டதும் அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பி ஓட முயன்றனர்.
இருப்பினும் வனத் துறையினர் அவர்களை துரத்தினர் அதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். மீதமுள்ள 5 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் பிடிபட்ட நபரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் அவர் கேரள மாநிலம் மன்னார்காடு வெள்ளக்குளம் பகுதியைச் சேர்ந்த ராமன் (வயது 65 ) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அந்த கும்பல் வெட்டி கடத்த முயன்ற 60 கிலோ சந்தன மரத் துண்டுகளை கைப்பற்றினர். மேலும் தப்பி ஓடிய 5 பேரை வனத்துறையினர் போலீசார் துணையுடன் தீவிரமாக தேடி வருகின்றனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ராமனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.