கோவை : சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழையலாம் என்ற தீர்ப்பு பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருப்பதை அறிய முடிவதாக கோவையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை : சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழையலாம் என்ற தீர்ப்பு பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருப்பதை அறிய முடிவதாக கோவையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை ரயில்நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது :- சபரிமலை அய்யப்பன் கோவில் வழிபாட்டு முறைகள் பாரம்பரியமாக அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால், இந்த தீர்ப்பு அந்த ஆலயத்தில் உள்ள பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதை அறிய முடிகின்றது.
தேவசம்போர்டு மேல்முறையீடு செய்ய முடிவு செய்து இருப்பதாக அறிந்துள்ளேன். பாரம்பரியம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கின்றது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு முடிவு செய்ய எதுவுமில்லை. மாநில அரசுதான் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பா.ஜ.க.,வை மையப்படுத்தியே அனைத்து அரசியலும் நடைபெற்று வருகிறது. இதை அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்ந்து இருக்கின்றனர். பா.ஜ.க., தமிழக அரசியலில் மையப்புள்ளியாக இருந்து வருகின்றது. தி.மு.க., பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக அ.தி.மு.க.,வினரும்,
அ.தி.மு.க., பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக தி.மு.க.,வினரும் கூறி வருகின்றனர். நாங்கள் எந்தக் கட்சிக்கும் பின்னால் இருந்து செயல்படவில்லை. அனைவருக்கும் முன்னோடியாக இருந்து வருகின்றோம்.
அடுத்த ஆண்டு வரும் தேர்தல் ஜூரம் காரணமாக ரபேல் ஊழல் குற்றச்சாட்டு பெரிதுபடுத்தப்படுகிறது. ரபேல் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக துறை அமைச்சர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.