கோவை: வனப்பகுதிகளில் பனை மரங்களை வளர்க்கும் வகையில் கோவையில் உள்ள பல்வேறு வனப்பகுதிகளில் பனை விதைகளை நடவு செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: வனப்பகுதிகளில் பனை மரங்களை வளர்க்கும் வகையில் கோவையில் உள்ள பல்வேறு வனப்பகுதிகளில் பனை விதைகளை நடவு செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் வரும் 7ம் தேதி பனை விதை திருவிழா நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக அந்த அமைப்பினரிடம் இருந்து பனை விதைகளை வனத்துறையினர் வாங்கியுள்ளனர்.

நேற்று மட்டும் மதுக்கரை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகங்களில் பனை விதைகளை நடவு செய்யும் பணி தொடங்கியது. மதுக்கரையில் மட்டும் நேற்று 1,400 விதைகள் நடவு செய்யப்பட்டன. கோவை வனக்கோட்டத்தில் உள்ள பல்வேறு வனப்பகுதியில் 30,000 விதைகள் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அருளகம் அறக்கட்டளையைச் சேர்ந்த பாரதிதாசன் கூறுகையில், "யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வன எல்லைப்பகுதிகளில் உள்ள அகழி கரையில் பனை விதைகள் நடவு செய்யப்படுகின்றன. இதன் மூலம் அகழியின் கரை பலமாகும். அதோடு, பனை மரம் பல்வேறு விதங்களில் வன உயரிகளுக்கு உதவுகிறது.

பனை பழங்களை யானைகள் விரும்பி உண்ணும், பனை மரத்தை சார்ந்து, பச்சைக் கிளி, மர நாய், பனை உழவாரன் என்ற பறவை இனம், பனை அணில் மற்றும் பனங்காடை போன்ற பல்வேறு உயிரிகள் உள்ளன." என்றார்.
இது குறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன் கூறுகையில், "யானை அகழிகளை வெட்டவும், அதனை பராமரிக்கவும் ஆண்டுதோறும் பல கோடி செலவிடப்படுகிறது. பனை மரங்களை அங்கு வளர்ப்பதன் மூலம் அகழி பராமரிப்பு செலவு நிச்சயம் குறையும். வன விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்கும் இயற்கை அரணாக பனை மரங்கள் இருக்கும்." என்றார்.
