கோவை: போதை மருந்து வழக்கு விவகாரத்தில் வழக்கறிஞர் ஜக்காரியாவிடம் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை: கோவை: போதை மருந்து வழக்கு விவகாரத்தில் வழக்கறிஞர் ஜக்காரியாவிடம் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதை மருந்து வழக்கில் கைதான முகமது சிஹாப் என்பவரை ஜாமீனில் விடுவிக்க, அவருக்கு வலிப்பு நோய் இருப்பதாக வழக்கறிஞர் ஜக்காரியா நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்தார். ஆனால், இந்த ஆவணங்கள் குறித்து சந்தேகமடைந்த நீதிபதிகள், காட்டூர் காவல் நிலைய ஆய்வாளரிடம் உண்மைத்தன்மையை அறிய விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
பின்னர், இதை விசாரித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். இப்படியிருக்க காவல்துறையின் விசாரணையில் இந்த சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை எனவும் உறுதி செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் ஜக்காரியா, கோவை அரசு மருத்துவமனையின் மருத்துவப் பணியாளர் பீர் முகமது, டாக்டர்.டி.சி ராமகிருஷ்ணன், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் எஸ்.உஷா மற்றும் மன்சூர், முகம்மது சாஹிப் ஆகியோர் இணைந்து போதை மருந்து குற்றவாளியை விடுவிக்க போலியான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து இவர்கள் மீது போலியான ஆவணங்கள் சமர்ப்பித்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய்பாபா உத்தரவிட்டார்.

இதன்பேரில், வழக்கறிஞர், மருத்துவர்கள் என 6 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளில் காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு மாநகர குற்ற பிரிவு போலீசார் ஜக்காரியாவிடம் திடீர் விசாரணை செய்து வந்தனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு அவரை திடீரென கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் உடல் நிலை மோசமானதையடுத்து அவரது சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சை கொடுக்க கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவங்களால் குழப்பம் ஏற்பட்டது.