கோவை : பெங்களூர் மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் செயல்படுத்தப்படும் 'பைக்-பகிர்தல்' எனப்படும் வாடகை பைக் திட்டம் கோவைக்கும் வர வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.
கோவை : பெங்களூர் மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் செயல்படுத்தப்படும் 'பைக்-பகிர்தல்' எனப்படும் வாடகை பைக் திட்டம் கோவைக்கும் வர வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் பரீட்சார்த்த முறையில் சோதனை செய்யப்பட்ட மிதிவண்டி பகிர்தல் திட்டம் மீண்டும் தொடங்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து 'பைக் பகிர்தல்' திட்டமும் நகரில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் 1,000 மிதிவண்டிகளோடு செயல்பாட்டுக்கு வந்த 'ஓஃபோ' நிறுவனம் நிதி நெருக்கடியால் இத்திட்டத்தில் இருந்து விலகியதையடுத்து, சீனாவைச் சேர்ந்த 'மொபைக்' நிறுவனம் திட்டத்தை செயல்படுத்த முன்வந்தது. முதற்கட்டமாக, என்.எஸ்.ஆர்., சாலை மற்றும் சாய்பாபா காலனி பகுதிகளில் இத்திட்டத்தை சோதனை அடிப்படையில் செயல்படுத்த முன்வந்தது. ஆனால், ஆரம்பகட்ட ஆய்வுகளோடு செயல்பாடுகளை நிறுத்திவிட்டு 'மொபைக்' நிறுவனமும் வெளியேறியுள்ளது.

இந்த நிலையில், மிதிவண்டி பகிர்தல் திட்டத்தை கோவையில் செயல்படுத்த பெங்களூரைச் சேர்ந்த 'மெட்ரோ பைக்' எனும் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் பெங்களூர், ஐதராபாத், மைசூர், ஜெய்பூர், உதய்பூர், பெலகாவி, மனிபால், ஜெய்சால்மர், கொகர்னா, டண்டெலி மற்றும் ஷ்ரவனபெலெகொலா ஆகிய நகரங்களில் ஸ்கூட்டர் மற்றும் பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் பகிர்தல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் ஒருமணி நேரத்தில் இருந்து அதிகபட்சம் ஒரு மாதம் வரை இருசக்கர வாகனங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், இந்த நிறுவனம், கோவை மாநகரில் பயன்படுத்தப்பட்ட ஓஃபோ நிறுவனத்தின் 500 மிதிவண்டிகளை வாங்க திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், ஓஃபோ மிதிவண்டிகள் அதிகமாக சேதப்படுத்தப்பட்ட வடவள்ளி பகுதியில் முதற்கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறு மெட்ரோ பைக் நிறுவனத்திற்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

ஜி.பி.எஸ்., மற்றும் மிதிவண்டி பகிர்தலுக்கான பிரத்யேக செயலியை ஓஃபோ நிறுவனத்திடம் இருந்து மெட்ரோ பைக் நிறுவனத்திற்கு மாற்றும் பணிகள் நிறைவடைந்ததும், வடவள்ளியில் ஆய்வுப்பணிகளை மெட்ரோ பைக் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. வடவள்ளியில் மிதிவண்டி பகிர்தல் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டவுடன், நகர் முழுவதும் 5,000 மிதிவண்டிகளைப் பயன்படுத்த மெட்ரோ பைக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மிதிவண்டி பகிர்தல் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பின்னரே, மெட்ரோ பைக் நிறுவனத்தின் மூலம் 'பைக் பகிர்தல்' திட்டத்தையும் துவங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் கூறுகையில், "சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல், உடல் ஆரோக்கியத்திற்கு உதவக் கூடிய மிதிவண்டி பகிர்தல் திட்டம் கோவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும், பெரும்பாலான மிதிவண்டிகளை சிலர் சேதப்படுத்தியதால், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. 'மெட்ரோ பைக்' நிறுவனம் மூலம் மீண்டும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் மிதிவண்டி பகிர்தல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மிதிவண்டி பகிர்தல் திட்டம் குறித்த மக்களின் மனநிலையையும், பயன்பாடு குறித்த தகவல்களை திரட்டவும் வடவள்ளியில் இத்திட்டம் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. மிதிவண்டி பகிர்தல் திட்டத்திற்கு பொதுமக்கள் சிறப்பான ஒத்துழைப்பு தரும்பட்சத்தில், 'மெட்ரோ பைக் நிறுவனத்தின்' மூலம் இருசக்கர வாகனம் பகிர்தல் திட்டம் செயல்படுத்தப்படும், என்றனர்.