நீலகிரி : உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நோக்கில் சுற்றுலாத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி : உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நோக்கில் சுற்றுலாத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளில், 55 சதவீதம் வனப்பகுதியை கொண்டு தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற்றுள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடு, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளும், மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் அரிய வகை வரையாடுகளின் புகழிடமாக திகழ்ந்து வருகிறது.

இதுமட்டுமின்றி, அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம், படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
அதேபோல, சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை காண ஆண்டுதோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கில் வந்து செல்கின்றனர். குறிப்பாக, அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர். இத்தகைய சுற்றுலா தலங்களைக் கொண்ட நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில், சுற்றுலாத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதோடு, மலை மாவட்டத்தில் சிறப்புமிக்க விவசாயப் பயிர்கள், மலர்கள், பழங்கள் மற்றும் பொருட்களின் கண்காட்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இது சுற்றுலாப் பயணிகளை கவருவதோடு, உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இதனிடையே, குறுகிய நகரமான உதகையில் போதிய பார்க்கிங் வசதி இல்லாததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், உதகை நகரின் மையப்பகுதியில் ஓடும் கோடப்மந்து கால்வாயில் கலக்கும் ஓட்டல்களின் கழிவுகளும், குடியிருப்பு கழிவுகளும் முறையாக சுத்திகரிக்காமல் நேரடியாக படகு இல்ல ஏரியில் கலப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் விரும்பும் வகையில், சுற்றுலா தலங்களில் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் ஒருபுறம் எடுத்து வந்தாலும், எந்தவித இடையூறும், காலதாமதமும் ஏற்படாத வண்ணம் பார்க்கிங், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என உள்ளுர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினம் ஆண்டுதோறும் கொண்டாப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான உலக சுற்றுலா தினம் விரைவில் கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கு, முன்னதாக சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.