கோவை : கோவை மாவட்டத்தில் சராசரி மழையளவை விட கூடுதல் மழை பதிவாகும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கோவை : கோவை மாவட்டத்தில் சராசரி மழையளவை விட கூடுதல் மழை பதிவாகும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
2018-ம் ஆண்டின் வடகிழக்கு பருவமழைக் காலத்திற்கான (அக்., முதல் டிச., வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, ஜுன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பசுபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து மழை மனிதன் என்னும் கணினி கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையங்களில் இருந்து தகவல்கள் பெறப்பட்டன. இதில், வடகிழக்கு பருவமழையானது மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சராசரி மழையளவு கிடைக்கும் வகையில் பெய்யும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 328 மி.மீ., சராசரி மழையளவாகும். ஆனால், நடப்பாண்டில் 363 மி.மீ., மழைப் பொழிவினைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல, திருப்பூர் மாவட்டத்தில் 281 மி.மீ., மழையும், மலை மாவட்டமான நீலகிரியில் அதிகபட்சமாக 462 மி.மீ., மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடகிழக்கு பருவமழையின் போது, மேற்கு மண்டல மாவட்டங்களான கோவை, ஈரோடு திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நிலக்கடலை, ஆமணக்கு, துவரை, சோளம், மக்காச்சோளம் போன்ற பயிரிடலாம் என விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது.