நீலகிரி : உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக சுற்றுலாவை ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நீலகிரி : உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக சுற்றுலாவை ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாத இறுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும். இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக அதிகளவு மழை பெய்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் மற்றும் மேக மூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவி வந்தது.

அதே வேளையில், கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில், இன்று காலை முதல் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் வெயில் அடித்து வந்த நிலையில், மாலை 4 மணி முதல் கனமழை பெய்து வருகிறது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கை அழகை ரசிக்க வந்த வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா ஸ்தலங்களை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.