மூத்த அமைச்சர்களை விட என்னைப் பார்த்தால் தி.மு.க.,வினருக்கு பயம் : கோவை அ.தி.மு.க., கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி பேச்சு

கோவை : தன் மீதுள்ள பயத்தினால் தான் லஞ்ச ஒழிப்புத்துறையில் மூத்த அமைச்சர்கள் மீது புகார் அளிக்காமல், தனது மீது தி.மு.க.,வினர் புகார் அளித்திருப்பதாக கோவையில் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி தெரிவித்தார்.


கோவை : தன் மீதுள்ள பயத்தினால் தான் லஞ்ச ஒழிப்புத்துறையில் மூத்த அமைச்சர்கள் மீது புகார் அளிக்காமல், தனது மீது தி.மு.க.,வினர் புகார் அளித்திருப்பதாக கோவையில் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி தெரிவித்தார். 

லஞ்ச ஒழிப்பு துறையில் முதல்வர்,துணை முதல்வர் ஆகியோருக்கு பின்னர் மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ,தங்கமணி ஆகியோர் மீது புகார் கொடுக்காமல் என் மீது மூன்றாவதாக திமுகவினர் புகார் கொடுத்து இருக்கின்றனர் எனவும் என்னை பார்த்து திமுகவிற்கு அவ்வளவு பயம் என கோவையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.



ஈழ தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்கள ராணுவத்திற்கு உதவியதாக தி.மு.க., காங்கிரஸ் கட்சியினரை கண்டித்தும், அக்கட்சியினரைப் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி கோவை சிவானந்தா காலனியில் அ.தி.மு.க., சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் நெத்தியடி நாகையன் கலந்து கொண்டார். 



பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.. வேலுமணி பேசியதாவது :- இரண்டே நாளில் இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. டி.டி.வி., தினகரன், ஸ்டாலின் போன்றவர்கள் இந்த கூட்டத்தைப் பார்த்து அ.தி.மு.க., தொண்டர்கள் யாருடன் இருக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக பேசிக்கொண்டு இருந்த தலைவர்கள் இப்போது அமைதியாக இருக்கின்றனர். இலங்கையில் 1.5 லட்சம் ஈழ தமிழர்கள் கொல்லப்பட்டது, 40,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதற்கு காரணம் தி.மு.க., காங்கிரஸ் என்பது ராஜபக்‌ஷே பேச்சின் மூலம் தெரிகின்றது. 

லஞ்ச ஒழிப்புத் துறையில் வெறும் பேப்பரை கொண்டு போய் புகார் கொடுத்துள்ளனர். முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு பின்னர் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, தங்கமணி மீது புகார் கொடுக்காமல் என் மீது மூன்றாவதாக புகார் கொடுத்து இருக்கின்றார் ஸ்டாலின். என்னை பார்த்து தி.மு.க.,விற்கு அவ்வளவு பயம். எனக்கு பின்னர் தங்கமணி மீது புகார்கொடுக்கப்பட்டுள்ளது. நானும், தங்கமணியும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., ஆகியோர் இணைய உறுதுணையாக இருந்தோம். ஆட்சி கலையும், கலையும் என சொன்னார்கள். ஆனால், இ.பி.எஸ்., இப்போது கான்கீரிட் போட்டு உட்கார்ந்து இருக்கின்றார். அ.தி.மு.க.,வில் வாரிசு அரசியல் கிடையாது. 

யார் வேண்டுமானாலும் முதலமைச்சரை சந்திக்கலாம். தினமும் முதலமைச்சர் ஏராளமான கோப்புகளில் கையெழுத்திடுகின்றார். இந்த ஆட்சி் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும். தினகரனை கட்சியை விட்டு போக சொன்னது நானும், தங்கமணியும் தான். சிங்கம் போல எங்களை உருவாக்கியுள்ளார் ஜெயல்லிதா. மத்தியில் ஆட்சியில் இருந்த போது தமிழகத்திற்கு தி.மு.க., எதுவும் செய்யவில்லை. 

50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கோவை மாவட்டத்திற்கு கொடுத்து இருக்கின்றோம். சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம், பல்லடம், தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி பகுதிகளில் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றோம். அத்திக்கடவு - அவினாசி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் நெஞ்சை நிமிர்த்தி ஓட்டு கேட்போம். 



தினகரன், ஸ்டாலின் போன்றோர் வெறும் பேட்டிகளை மட்டும் கொடுத்து கொண்டு இருக்கின்றனர். செயல்பாடுகள் எதுவும் இல்லை. அமைச்சர் பதவி, கட்சி பதவிகளை விட தயாராக இருக்கிறது. தன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்து விட்டால் அரசியலை விட்டு போக தயாராக இருக்கிறேன். ஸ்டாலின் அவருடைய தலைவர் பதவி, எதிர்க்கட்சி தலைவர் பதவி ஆகியவற்றைக் கைவிட தயாரா..?. தமிழர்களை கொன்று குவிக்க காரணமானவர்களை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். 

இதனிடையே, பொதுக்கூட்டம் நடைபெற்று கொண்டு இருந்தபோது கட்சியினர் பார்க்க வைக்கப்பட்டிருந்த எல்.ஈ.டி.,வால் சரிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. சிறுவனை மீட்டவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.



அமைச்சர் எஸ்.பி.,வேலுமணி பேசிக்கொண்டு இருக்கும் போதே மழை பெய்ய தொடங்கியது. இதனையடுத்து கூட்டம் கலைந்து சுமார் அரைமணி நேரம் மழைபெய்த நிலையில், கூட்டம் அப்படியே கலைந்து சென்றது. மழையில் நனைந்தபடியே அங்கு இருந்த அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர்கள தங்களது வாகனங்கள் மூலம் புறப்பட்டு சென்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...