திருப்பூர்: திருப்பூரில் இரும்புத்திரை திரைப்பட பாணியில், பல்வேறு நபர்களின் ஆவணங்களைப் பெற்று, ரூ.18 கோடி வங்கியில் கடனாக பெற்று மோசடி செய்த வழக்கில் கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூரில் இரும்புத்திரை திரைப்பட பாணியில், பல்வேறு நபர்களின் ஆவணங்களைப் பெற்று, ரூ.18 கோடி வங்கியில் கடனாக பெற்று மோசடி செய்த வழக்கில் கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூரை சேர்ந்தவர் செந்தில் குமார் (35). இவரது மனைவி பிரியா (31). செந்தில் குமார் தனது மனைவி மற்றும் தனது நண்பர் ராஜேஷ் கண்ணா ஆகியோரது பெயரில் தனித்தனியே போலி பின்னலாடை நிறுவனங்கள் தொடங்கி திருப்பூர் (கார்ப்பரேஷன்) தனியார் வங்கியில் ரூ.10.25 கோடி கடன் பெற்றுள்ளார்.

இந்த கடனை அடைக்க வேண்டிய சூழலில் பணத் தேவை அதிகம் உள்ளவர்கள் மற்றும் வங்கியால் கடன் அளிக்க முடியாது என கைவிடப்பட்ட பின்னலாடை அதிபர்களை அணுகி, கடன் பெற்றுத் தருவதாக தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய தொழில் அதிபர்கள் செந்தில் குமாரிடம் தங்கள் ஆவணங்களை ஒப்படைத்துள்ளனர். இந்த ஆவணங்களை தனக்கு ஏற்றார் போல மாற்றி, போலி ஆவணங்களாக தயார் செய்த செந்தில் குமார் வங்கியில் சமர்ப்பித்து ஹாரூன்ரஷித் என்பவர் பெயரில் ரூ.8 கோடியே 34 லட்சம் கடன் பெற்று ரூ.5 கோடியை கடன் தொகையாகக் கொடுத்துள்ளார்.

அதே போல சிவப்பிரகாசம் என்பவரிடம் ரூ.6 கோடியே 12 லட்சத்து 60 ஆயிரம் கடன் பெற்று ரூ.1 கோடியே 12 லட்சத்தை மட்டும் கொடுத்துள்ளார். ராமசாமி என்பவரின் பெயரிலும் ரூ.3 கோடியே 92 லட்சத்தை கடன் பெற்று மொத்தமாக எடுத்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், கடன் பெற்றவர்களுக்கு வங்கியில் இருந்து மொத்த தொகையையும் செலுத்த நிர்ப்பந்தித்த போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஹாரூன்ரஷித், சிவப்பிரகாசம், ராமசாமி மூவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மாநகர குற்றப் பிரிவு போலீசார் ரூ.18 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் வங்கி ஊழியர் சோமயஜிலுவை கைது செய்தனர்.

அவர் தற்போது நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ள நிலையில், தலைமறைவாக இருந்த செந்தில் குமார் மற்றும் அவரது மனைவி பிரியா இருவரையும் மாநகர குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், வங்கி ஊழியர்கள் அனந்தநாயக், சங்கர், பத்மா ரெட்டி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரும்புத்திரை பட பாணியில் பணத் தேவை உள்ள தொழில் அதிபர்களை அணுகி போலி ஆவணங்கள் மூலம் ரூ.18 கோடி கடன் பெற்று மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.