கோவை : அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வழங்கப்படும் இலவச பஸ்பாஸ் இன்னும் கொடுக்கப்படாத நிலையில், பணத்தை எடுத்து வர மறந்த பள்ளி மாணவியை நடத்துநர் வனப்பகுதியின் நடுவே இறக்கிவிடத் துணிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வழங்கப்படும் இலவச பஸ்பாஸ் இன்னும் கொடுக்கப்படாத நிலையில், பணத்தை எடுத்து வர மறந்த பள்ளி மாணவியை நடத்துநர் வனப்பகுதியின் நடுவே இறக்கிவிடத் துணிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவி மைதிலி. இவர் தினமும் நீலகிரி மாவட்டம் பர்லியார் பகுதியில் இருந்து அரசு பேருந்தின் மூலம் பள்ளிக்கு சென்று கல்வி பயின்று வருகிறார். தமிழகம் முழுவதும் பள்ளிகள் தொடங்கி 3 மாதங்களுக்கு மேலாகியும் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச பஸ்பாஸ் தற்போது வரை வழங்கப்படவில்லை. இதனால், ஒருநாளைக்கு பள்ளி சென்று வர பேருந்து டிக்கெட்டிற்கு மட்டும் ரூ. 30 செலவு செய்து ஏழை மாணவியான மைதிலி கல்வி கற்று வருகிறார்.
இந்த நிலையில், இன்று காலை பர்லியாரில் இருந்து மேட்டுப்பாளையத்தில் உள்ள பள்ளிக்கு வருவதற்காக அவசர அவசரமாக அரசு பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தில் ஏறிய பிறகு தான் பணத்தை வீட்டிலேயே வைத்து விட்டு வந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, பணமில்லாத நிலையில் பேருந்து நடத்துனரிடம் அழுதுகொண்டே, 'பணத்தை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டேன். மாலை வரும் பொழுது எங்களது ஆசிரியர்களிடம் இருந்து பணம் பெற்று தருகிறேன். என்னை மேட்டுப்பாளையத்தில் இறக்கி விடுங்கள்,' என்று மாணவி மைதிலி கெஞ்சி இருக்கிறார். ஆனால், மாணவியின் இந்த நடத்தையால் சிறிதும் மனம் இறங்காத நடத்துநர், விலங்குகள் நடமாடும் வனப்பகுதி எனக் கூட பார்க்காமல் நடுவழியில் இறங்குமாறு அதட்டியுள்ளார். இதனால், செய்வது அறியாமல் தவித்த மாணவியின் நிலையை புரிந்து கொண்ட, சில சக பயணிகள் மாணவிக்கு மேட்டுப்பாளையம் செல்வதற்கு டிக்கெட் எடுத்தனர்.
இலவச பஸ்பாஸ் விநியோகிக்கும் வரை பள்ளி சீருடை அணிந்திருக்கும் மாணவ, மாணவிகள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் அரசு பள்ளியில் பயிலக்கூடிய ஏழை, எளிய மாணவர்கள், போக்குவரத்து நிர்வாகத்தின் மெத்தென போக்கால் பணம் கொடுத்துதான் பள்ளிகளுக்கு செல்ல பயணிக்க வேண்டியுள்ளது. மேலும், குழந்தைகளின் மனநிலை பாதிக்கும் அளவில், இதுபோல செயல்களில் நடந்து கொண்டால் பெண் குழந்தைகளும் கல்வி கற்பதை இடையில் நிறுத்தக் கூடிய சூழல் உருவாகும்.
எனவே, மாணவியை அரசுப் பேருந்தில் ஏற்ற மாட்டேன் என்று கூறிய நடத்துனர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
"தமிழகம் முழுவதும் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ்பாஸ் வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும். இல்லையெனில், அரசுப் பள்ளிகள் மூடக்கூடிய சூழல் வருங்காலங்களில் உருவாகும். கிராமப்புற மலைவாழ் மக்களுடைய பெண் குழந்தைகளின் கல்வி என்பது எட்டாக்கனியாகிவிடும்" என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.