நீலகிரி : உதகை அருகே தடுப்புச் சுவர் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
நீலகிரி : உதகை அருகே தடுப்புச் சுவர் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
முக்கி மலையிலிருந்து மஞ்சூர் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை லோகராஜ் என்பவர் ஓட்டி வந்தார். இந்தப் பேருந்து மஞ்சூர் அருகே உள்ள குந்தா பகுதியில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி வலது பக்கம் இருந்த தடுப்பு சுவரில் மோதி நின்றது.
இதில் பேருந்தில் பயணித்தவர்களில் பழனிசாமி (60), சண்முகம் (65), லோகராஜ் (43), லட்சுமி (60), வத்சலா (50), லட்சுமி (75) ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு மஞ்சூர் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பேருந்தில் பயணித்த பயணிகள் கூறும்போது :- முக்கி மலையில் புறப்பட்டதில் இருந்தே பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டு வந்தது. விபத்து நடந்த இடத்தில் வலது பக்கத்திற்கு பதிலாக இடது பக்கம் விழுந்திருந்தால் ஏறக்குறைய 250 அடி ஆழத்தில் உள்ள குந்தா அணையில் விழுந்திருக்கும்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்