திருப்பூர் : தாராபுரத்தில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றக்கோரி திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் : தாராபுரத்தில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றக்கோரி திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகச் மாவட்ட செயலாளர் க.சண்முகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழியிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :- தாராபுரம் தீவுத்திடல் தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை கடந்த 2008-ம் ஆண்டு திறக்கப்பட்டது. தந்தை பெரியார் சிலையானது சட்டமுறைப்படி விண்ணப்பம் செய்து முழுவரைபடத்துடன் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, அனுமதி வழங்கப்பட்டதோடு அதை முழுமையாக பாரமரிக்கவும், பாதுகாக்கவும் தாராபுரம் நகர திராவிடர் கழகத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, முறையாக சுற்றுச்சுவர் எடுக்கப்பட்டு முன் கதவுகள் அமைக்கப்பட்டு பாதுகாப்புடன் பூட்டுப் போட்டு பாரமரிக்கப்பட்டும் வருகிறது.
இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி பெரியாரின் 140-வது பிறந்தநாளன்று அவரது உருவ சிலையின் முன்புற பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்து சிலையின் மீது பழைய காலணிகளை வைத்து அவமரியாதை செய்தனர். இது தொடர்பாக திராவிடர் கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாரை வலியுறுத்திய பின்னரே நவீன்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை இவர் தனிநபராக செய்திருக்க வாய்ப்பு இல்லை. பலர் ஒன்று கூடி இந்த குற்றச்சதியை செய்திருப்பதாக தெரிகிறது.
ஒரு தனிநபர் மட்டுமே நள்ளிரவில் தனியே இக்குற்றச் செயலை செய்ய வாய்ப்பு இல்லை. அவருக்குப்பின் உள்ள குற்றவாளிகளையும் போலீஸார் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். ஆகவே, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கருத்துக்களை முறையான தளத்தில் முறைப்படி விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக பாதுகாப்பாக அமைக்கப்பட்ட ஒரு இடத்தில் அத்துமீறி நள்ளிரவில் நுழைந்து சதி செயலில் ஈடுபட்டுள்ளனர். தாராபுரம் நகரக் காவல்நிலையத்தில் பதிவு செய்துள்ள இந்த வழக்கை உடனடியாக சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற வேண்டும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்த மனு அளிக்கும் போது, மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு சண்முகம், சட்டத்துறை துணைச் செயலாளர் வழக்கறிஞர் பாண்டியன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சக்திவேல், திருப்பூர் மாவட்ட தலைவர் இரா. ஆறுமுகம் உள்பட பலர் உடனிருந்தனர்.