திருப்பூர்: முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டாம் என மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பாளர்கள், கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பூர்: முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டாம் என மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பாளர்கள், கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் மக்களுடனான பயணத்தின் ஒரு பகுதியாக காங்கயத்தில் அக்கட்சியின் பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை மதியம் காங்கயம் பேருந்து நிலையம் அருகே, சந்தைப்பேட்டை வளாகத்தில் உள்ள சீரணி அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் பேசியதாவது :-

நீங்க அரசியலில் முழுநேரமாக ஈடுபட வேண்டியதுதானே, ஏன் நடுவுல பிக் பாஸ் நிகழ்ச்சி பண்றீங்க? என என்னிடம் கேட்கிறார்கள். அய்யா, அவரவருக்கு தொழில் வேண்டும். அரசியல் தொழிலாக இருக்கக் கூடாது. அரசியல் தொழிலாக ஆனதால் தான் பல பேர் அதையே வியாபாரமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.
நமக்கு அரசியல் தொழில் அல்ல, நாட்டுக்கு நாம் செய்யப்போகும் கடமை அது. நான் இந்த மேடையில் இருப்பவர்களிடமும் சொல்லிக் கொள்கிறேன், முழுநேரமும் அரசியல் செய்ய வருகிறேன் என்கிறீர்கள். அது மக்கள் நீதி மய்யத்தில் நடக்காது. முழுநேரமும் தூங்குபவன் சோம்பேறி. முழுநேர அரசியல் செய்யுங்கள், முழுநேர அரசியல் செய்யுங்கள் என மற்றவர்களும் மக்கள் நீதி மய்யத்தை மிரட்டாதீர்கள்.

உங்களுக்கு முடிந்த நேரத்தை அரசியலுக்கு ஒதுக்குங்கள். நம் எல்லோருக்கும் கடமை இருக்கிறது. இப்போது வாக்குறுதி கொடுப்பதற்கெல்லாம் நேரமில்லை. வேலை செய்வதற்கான நேரம் வந்து விட்டது.
காந்தியின் வழி
மகாத்மா காந்தி பரமக்குடி மாதிரியான கிராமத்துக்கு 3 முறை வந்திருக்கிறார். சென்னை நகரத்துக்கு 49 முறை வந்திருக்கிறார். அப்போது ஜெட் விமானம் கிடையாது. 4 வழிச்சாலை கிடையாது. ஆனாலும் அந்த முதிய வயதிலும் ஒவ்வொரு இடமாகச் சென்று மக்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அதுதான் எனக்கு முன்னுதாரணம். அதைத்தான் நானும் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.
அதற்கு ஏதுவாக நீங்கள் அன்புச் சாலை போட்டு வைத்திருக்கிறீர்கள். யார் தடுத்தாலும், அந்தத் தடைகளை எல்லாம் வென்றும் சரித்திரம் படைப்போம். கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு, கேள்வியெழுப்ப வேண்டும்.
முன்னதாக, இந்தக் கூட்டத்தில் பாடலாசிரியர் சிநேகன், நடிகை ஸ்ரீப்ரியா உள்ளிட்டோரும் உரையாற்றினர்.