கோவை: பெண்களின் பாதுகாப்பிற்கு எதுவும் செய்யாத மத்திய அரசு, முஸ்லிம் சமூக மக்களின் மீதான குரோத மனப்பான்மையுடன் முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை: பெண்களின் பாதுகாப்பிற்கு எதுவும் செய்யாத மத்திய அரசு, முஸ்லிம் சமூக மக்களின் மீதான குரோத மனப்பான்மையுடன் முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "முத்தலாக் குறித்த அவசர சட்டத்தை மத்திய அரசு அவசர கதியில் நிறைவேற்றியுள்ளது. மேலும், மாநிலங்களவையில் எதிர்ப்பினால் நிறைவேற்ற முடியாததை சட்டமாக்கி இருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

இச்சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பை தராது. இது முஸ்லிம் குடும்பங்களை சீர்குலைக்கும். பெண்களின் பாதுகாப்பிற்கு எதுவும் செய்யாத மத்திய அரசு, முஸ்லிம் சமூக மக்களின் மீதான குரோத மனப்பான்மையுடன் இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
திருச்சியில் வருகின்ற அக்டோபர் 7-ம் தேதி அரசமைப்பு பாதுகாப்பு மாநாடு ம.ம.க., சார்பில் நடைபெற்ற உள்ளது. கோவையில் இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக 7 பேர் கைது செய்த விவகாரத்தில், காவல் துறையினர் யூகங்கள் அடிப்படையில் உபா சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும். மனநோயாளி போல நீதிமன்றத்தை விமர்சித்த பா.ஜ.க., தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை? நீதிமன்றத்தையும், காவல்துறையையும் இழிவுபடுத்திய ஹெச்.ராஜாவை உபா சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
தமிழக முதலமைச்சர் உட்பட பல அமைச்சர்கள் ஊழலில் திளைக்கின்றனர். 100 சதவீதம் ஊழல் ஆட்சியாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி உள்ளது. ஊழல் விசாரணை முறையாக நடைபெற அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்." என்றார்.