கோவை: சர்வதேச தொழில்முனைவோர் அமைப்பு (TIE) - கோவை கிளையின் சார்பில் நடத்தப்படும் 'ஹேக்கத்தான் 2018' போட்டிக்கான போஸ்டர் அறிமுக நிகழ்ச்சி ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
கோவை: சர்வதேச தொழில்முனைவோர் அமைப்பு (TIE) - கோவை கிளையின் சார்பில் நடத்தப்படும் 'ஹேக்கத்தான் 2018' போட்டிக்கான போஸ்டர் அறிமுக நிகழ்ச்சி ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
கோவை நகரின் பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்கு நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு தீர்வு காணும் வகையில், சர்வதேச தொழில்முனைவோர் அமைப்பு (TIE) - கோவை கிளையின் சார்பில் 'ஹேக்கத்தான் 2018' எனப்படும் கோடிங் போட்டி செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஜி.ஆர்.டி., கல்லூரியில் நடைபெறுகிறது. இதற்கான போஸ்டர் அறிமுக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கோவை மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன், 'ஹேக்கத்தான் 2018'-க்கான போஸ்டர்களை அறிமுகம் செய்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- கோவை மாநகராட்சியில் நவீன தொழில்நுட்பங்களின் பங்களிப்போடு ஸ்மார்ட் சிட்டி மற்றும் டிஜிட்டல் நிர்வாகம் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள காற்றின் மாசு அளவு கண்காணிக்கும் கருவிகள் அனைத்தும் தரமானதாகவும், விலை குறைந்ததாகவும் கோவையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல, பொதுமக்கள் தினமும் சந்திக்கும் பொது பிரச்சனைகளை சாதாரணமாக கடந்துபோகாமல், அதற்கான தீர்வை நோக்கி நகரும்போது நகரம் மேலும் வளர்ச்சியடையும். 'ஹேக்கத்தான் 2018' போட்டிகளில் தேர்வு செய்யப்படும் சிறப்பான கண்டுபிடிப்புகள், மாநகராட்சியின் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். நகரின் இளைஞர்களும், தொழில்முனைவோர்களும் இதில் பங்கேற்று நகரின் வளர்ச்சிக்கான தீர்வுகளை முன்வைக்க வேண்டும், இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சர்வதேச தொழில் முனைவோர் அமைப்பு - கோவை கிளையின் தலைவர் ஜி.கார்த்திகேயன், முன்னாள் தலைவர் டாக்டர் ஏ. செல்வகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இப்போட்டி குறித்து ஒருங்கிணைப்பாளர் கோகுல்தாமோதரன் கூறியதாவது :- ஹேக்கதான் நிகழ்வின் மையக்கருத்து இளைஞர்களின் தொழில்நுட்ப அறிவை ஊக்கப்படுத்தி நகர்புறங்களில் உள்ள பிரச்சனைகளை கலைவதற்கு செயல்திட்டங்களை உருவாக்குவது. சர்வதேச தொழில்முனைவோர் அமைப்பின் - கோவை கிளை இரண்டாவது முறையாக இந்தப் போட்டியை நடத்துகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் தொழிநுட்பத்தின் உதவி கொண்டு பிரச்சனைகளுக்கான தீர்வை கண்டறிவதே இதன் சவால்.
ரோபோடிக்ஸ், பொபைல் ஆப் முதலான ஏழு பிரிவுகளின் கீழ் நடைபெறும் இந்த சவாலில் தொடர்ச்சியாக 30 மணி நேரம் பங்கேற்பவர்களுக்கு தரப்படும். ஒரு குழுவில் ஒன்று முதல் மூன்று பேர் இருக்கலாம். பள்ளி மாணவர்கள் முதல் தொழில் முனைவோர் வரை எவரும் பங்கேற்கலாம். கொடுக்கப்படும் நகர் சிக்கல்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் சிறப்பான கோடிங் உருவாக்குபவர்களுக்கு ஒரு லட்சம் வரை பரிசுகள் வழங்கப்படும். இப்போட்டியைப் பற்றி மேலும் அறிய www.coimbatore.tie.org/tie-hackathon-2018 என்ற வலைதளத்தை அணுகலாம், என்றார்.