கோவை : பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாளையொட்டி, கோவையில் பல்வேறு இடங்களில் அவரது சிலைகள் மற்றும் படங்களுக்கு கட்சியினர், தொழிற்சங்கங்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
கோவை : பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாளையொட்டி, கோவையில் பல்வேறு இடங்களில் அவரது சிலைகள் மற்றும் படங்களுக்கு கட்சியினர், தொழிற்சங்கங்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

கோவை ஹூசூர் சாலையில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில் இருந்து அக்கட்சியினர் ஊர்வலமாக சென்று அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர், கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், கோவை மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி., அருண்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், ஆறுகுட்டி, கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் செ.ம. வேலுசாமி, முன்னாள் அமைச்சர் தாமோதரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.ராஜூ, த.மலரவன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல, அக்கட்சியின் சார்பு அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அண்ணாவின் 110-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இரண்டு நாட்கள் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் தலா நான்கு கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதேபோல, கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் தி.மு.க,வினர் ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சுந்தராபுரத்தில், பகுதி செயலாளர் உதயக்குமார் தலைமையில் தி.மு.க.,வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அ.ம.மு.க., சார்பில் சுங்கம் பகுதியில் உள்ள மாநகர மாவட்ட அலுவலகத்தில் சிறுபான்மையினர் குழு தலைவர் தாராசபி தலைமையில் அக்கட்சியினர் மலரஞ்சலி செலுத்தினர்.