திருப்பூர் : தோழியுடன் சென்ற வாலிபரின் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் எனக் கூறி காவலர் மிரட்டுவதாக திருப்பூர் காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் : தோழியுடன் சென்ற வாலிபரின் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் எனக் கூறி காவலர் மிரட்டுவதாக திருப்பூர் காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை கணபதியைச் சேர்ந்த பூபதி என்பவரின் மகன் பூபாலன். இவர் கடந்த சனிக்கிழமை தனது தோழியுடன் பெருமாநல்லூருக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பெருமாநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் சீருடையில் நின்று கொண்டிருந்த இருந்த 2 காவலர்கள் அவர்களை மடக்கியுள்ளனர்.

அப்போது, ஆவணங்களை சமர்ப்பித்த நிலையிலும், தகாத வார்த்தையில் அந்த ஜோடியை பேசியதுடன் பூபாலனை காவலர் பிரபு தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும், அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தனது செல்போனைப் பிடிங்கி, அதிலிருந்த புகைப்படங்களை காவலர் பிரபு ஏற்றிக் கொண்டதாகவும், ரூ. 10,000 அபராதம் செலுத்தாவிட்டால் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியதாக பூபாலன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, 2 நாட்களுக்குப் பிறகு காவலர் பிரபு தனது வங்கிக் கணக்கை அனுப்பி, அதில் பணத்தை செலுத்துமாறு கூறியுள்ளார். ஆனால், இதனை தர மறுத்த பூபாலன் திருப்பூர் காவல் ஆணையரிடம் மனு ஒன்றை அளித்தார்.
அதில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பிடுங்கி சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் எனக் கூறிய பிரபு உள்பட 2 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.