அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக புகார்

கோவை: வரலாறு காணாத ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளது தி.மு.க.

கோவை: வரலாறு காணாத ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளது தி.மு.க.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஊழலில் ஈடுபட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் சமீபத்தில் செய்திகளை வெளியிட்டது. இந்த நிலையில், இதனைத்தொடர்ந்து, அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையில் தி.மு.க., சார்பில் திங்கட்கிழமையன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை தி.மு.க., எம்.பி., ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ளார். 

மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நியாயமாக நடக்க அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க., தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது-

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது சகோதரரின் நிறுவனங்களுக்கும், தனது உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் இயக்குநர்களாக உள்ள நிறுவனங்களுக்கும் அரசு ஒப்பந்தங்களை அள்ளிக் கொடுத்து உள்ளாட்சித் துறையை, கொள்ளையாட்சித் துறையாக உருக்குலைத்திருப்பது, பேரதிர்ச்சியளிக்கிறது.

அ.தி.மு.க அமைச்சரவையில் எஸ்.பி.வேலுமணி ஊழலின் மணியான கதாநாயகனாக இருந்து, அரசு கஜானாவை, தனது சொந்தங்களின் நிறுவனங்கள் மூலம், அப்படியே ஹைஜாக் செய்து, கொள்ளையடித்து வருவது பற்றிய புகாரை, இன்றைய தினம் தி.மு.க., மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரிடம் அளித்துள்ளார். 

இந்த பகல் கொள்ளை பற்றிய பகீர் தகவல்களை, டைம்ஸ் ஆஃப் இந்தியா தொலைக்காட்சி வெளியிட்டதற்காக, அதன் ஆங்கில நாளிதழின் மூத்த பெண் பத்திரிக்கையாளர் கோமல் கவுதம் மற்றும் உதவி ஆசிரியர் மயில்வாகனன் ஆகியோரை, அமைச்சரின் பினாமி ஒப்பந்ததாரர் சந்திரபிரகாஷ், சமூக வலைதளங்களிலும், தொலைபேசியிலும் மிரட்டி, அநாகரீகமான வார்த்தைகளால் அர்ச்சித்தது, கடும் கண்டனத்திற்குரியது.

உள்ளாட்சித்துறையின் கீழ் உள்ள சென்னை, கோவை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும், அமைச்சரின் ஆணைப்படிதான் ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. 86 லட்சம் ரூபாய் அளவுக்கு மட்டுமே வணிகம் செய்த நிறுவனம், இவர் உள்ளாட்சித்துறை அமைச்சரான பிறகு, 28 கோடி ரூபாய் அளவுக்கு “பிஸினஸ்” செய்யும் நிறுவனமாக மாறியிருக்கிறது. இன்னொரு நிறுவனம் ஐந்து மடங்கிற்கு மேல், தனது “பிஸினஸை” 150 கோடி ரூபாய் வரை அதிகரித்துள்ளது. குறிப்பாக 17 கோடி ரூபாய் மதிப்புள்ள பிஸினஸ் மட்டும் செய்து வந்த கேசிபி எஞ்சினியர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம், எஸ்.பி. வேலுமணியின் நேரடிக் கண் பார்வை பட்டதன் விளைவாக இன்றைக்கு ரூ.500 கோடி பிஸினஸ் செய்யும் நிறுவனமாகி விட்டது.

கட்டுமானப் பணிகள், உட்கட்டமைப்புப் பணிகள், நகை வியாபாரம்- போதாக்குறைக்கு மெட்டல் ஷீட் நிறுவனத்துக்கு, 149 கோடி ரூபாய் சென்னை ஸ்மார்ட் சிட்டி டெண்டர், மேலும் பத்து மாநகராட்சிகளின் ரூ.100 கோடி மதிப்புள்ள ஸ்மார்ட் சிட்டி டெண்டர் ஆகியவற்றை அளித்துள்ளார். இது அதிகார துஷ்பிரயோகம். அமைச்சர் எஸ்.பி. வேலுமணி “ஊழல் திருவிளையாடல்கள்” அரங்கேற்றி அ.தி.மு.க அமைச்சரவையில் மற்றவர்களையெல்லாம் தோற்கடித்து, முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். 942 கோடி ரூபாய் உபரி நிதி வைத்திருந்த சென்னை மாநகராட்சி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஊழல் டெண்டர்களால் சூறையாடப்பட்டு, இன்றைக்கு 2500 கோடி ரூபாய் கடனில் மாநகராட்சி மூழ்கியிருக்கிறது. 

ஒரு நிறுவனத்தின் பங்குகளை, 300 சதவீதம் அதிக விலை கொடுத்து, அமைச்சரின் பினாமி வாங்கியிருக்கிறார் என்றால், ஊழல் பணம் எப்படியெல்லாம் ஊரைச்சுரண்டி அதலபாதாளம் வரை ஆவேசத்துடன் பாய்கிறது என்பதை வெளிப்படையாகவே காண முடிகிறது. ஏற்கனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைவர் மீதும், தி.மு.க., சார்பில், தேவையான ஆதாரங்களுடன் ஊழல் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

அந்த ஊழல் புகார்களின் மீது, லஞ்ச ஊழல் கண்காணிப்புத்துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காமல், அச்சமே இல்லாமல் ஊழலுக்குத் துணை போனது வேதனையளித்தது. அதனால், உயர்நீதிமன்றத்தில் தி.மு.க., சார்பில் வழக்குத் தொடரப்பட்டு, இப்போது அந்த ஊழல் புகார்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக விசாரணைக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆகவே, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான இந்த ஊழல் புகார் மீது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, சட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி உடனடியாக நடவடிக்கை எடுத்து, அமைச்சர் எஸ். பி.வேலுமணி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.

ஆதலால், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் நியாயமான நேர்மையான சட்டத்திற்குட்பட்ட வெளிப்படையான விசாரணைக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், தனியார் ஆங்கில பத்திரிக்கையாளர்களை மிரட்டிய கான்டிராக்டர் சந்திரபிரகாஷை, சென்னை மாநகர காவல்துறை ஆணையர், உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இதில் தாமதம் ஏற்படுமானால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், இந்த ஊழல் - கொள்ளைக்குத் தொடர்புடையவர்கள், துணை செய்தவர்கள் என்றே நடுநிலையாளர்கள் கருதுவார்கள் என்பதையும் இப்போதே சுட்டிக்காட்டுகிறேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், பெண் பத்திரிகையாளர் கோமல் கவுதம் மிரட்டப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கோயம்புத்தூர் பிரஸ் கிளப் கண்டன அறிக்கையை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...