கோவை: சிங்காநல்லூர் அருகே உள்ள ரயில்வே கேட் அடிக்கடி பழுதடைந்து போவதால், அங்குள்ள மக்கள் சுமார் 4 கி.மீ., தூரத்தை எஸ்.ஐ.எச்.எஸ்-, காலனிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை: சிங்காநல்லூர் அருகே உள்ள ரயில்வே கேட் அடிக்கடி பழுதடைந்து போவதால், அங்குள்ள மக்கள் சுமார் 4 கி.மீ., தூரத்தை சுற்றி எஸ்.ஐ.எச்.எஸ்-, காலனிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையங்களில் சிங்காநல்லூர் ரயில்நிலையமும் ஒன்று. இதன் அருகே உள்ள பாரதிநகர், நீலிகோணம்பாளையம், நேதாஜிபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனிக்கோ அல்லது பிற பகுதிகளுக்கோ செல்ல அங்குள்ள ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டும். ஆனால், இந்த ரயில்வே கேட் அடிக்கடி பழுதடைவதால் அப்பகுதி மக்கள் பல ஊர்களை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
கடந்த இருதினங்களுக்கு முன்பு ரயில்வே கேட் பழுதடைந்தது. இதனால், அந்த கோளாறை சரிசெய்யும் வரை வாகன ஓட்டிகள் சுமார் 4 கி.மீ., தொலைவில் உள்ள ஊர்களை சுற்றி தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். பின்னர், வயர் அறுந்த கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் வாகனங்கள் வழக்கம்போல ரயில்வே கேட்டை கடந்து சென்றன. மேலும், அங்கு மேற்கொள்ளப்படும் பாலக் கட்டுமானப் பணிகளும் தாமதமாக மேற்கொள்ளப்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அதே ரயில்வே கேட் இன்று மீண்டும் பழுதடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியடைந்ததுடன், சக்தி நகர் வழியே பல ஊர்களை சுற்றி செல்கின்றனர். இதன் காரணமாக நேரம் விரயம் ஆவதுடன், பெட்ரோல் செலவு, உடல் அலைச்சல் போன்றவை ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பவர் கூறியதாவது :- சிங்காநல்லூர் அருகே உள்ள ரயில்வே கேட் கடந்த இருதினங்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதனால், சக்திநகர் வழியே சுமார் 4 கி.மீ., தூரத்தை சுற்றிச் சென்றனர். கோளாறு மீண்டும் சரி செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ரயில்வே கேட் பழுதடைந்துள்ளது. இது குறித்து ரயில்வே ஊழியர்களிடம் கேட்டதற்கு, கம்பம் உடைந்ததாகப் பதில் தெரிவித்தனர். மேலும், பாலக் கட்டுமானப் பணிகளும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. அதேவேளையில், வாகன ஓட்டிகள் சுரங்கப்பாதைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால், சுரங்கப்பாதை பணிகள் முழுமையடையாத நிலையில், அதனை எப்படி பயன்படுத்த முடியும், என்றார்.