கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக மாநகராட்சி சுகாதாரப் பிரிவு சார்பில் பொதுமக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக மாநகராட்சி சுகாதாரப் பிரிவு சார்பில் பொதுமக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா காய்ச்சல் வரிசையில் 'லெப்டோஸ்பைரோசிஸ்' எனப்படும் எலிக்காய்ச்சல் நோய் பரவி வருகிறது. 'ஸ்பைரோகீட்' என்னும் பாக்டீரியா வகையைச் சேர்ந்த கிருமிகளால் மனிதன் மற்றும் விலங்குகளை இந்த காய்ச்சல் தொற்றுவதாகக் கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எலிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம்களை மாநகராட்சி நிர்வாகம் கடந்த வாரம் தொடங்கியுள்ளது.

விழிப்புணர்வு முகாமில் பங்குபெறும் சுகாதாரக் குழுவினர், நகரின் முக்கிய குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொது இடங்களை தேர்வு செய்து, அங்கு எலிக்காய்ச்சல் குறித்த தகவல்களை பகிர்வதோடு, காய்ச்சல் பாதிப்பின் அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார் கூறியதாவது :- ஸ்பைரோகீட் கிருமி, நோய் தொற்றுள்ள விலங்குகளின் சிறுநீர் மூலம் தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களில் பரவும்போது மனிதர்களை தாக்குகிறது. எலிக்காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க அனைவரும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இந்த வகை காய்ச்சல் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்று நோய் இல்லை. தண்ணீர் மற்றும் உணவுகள் மூலமாகத்தான் அதிகம் பரவுகின்றது.
இந்த நோய்க் கிருமிகள் உடலில் தாக்கும்போது பல்வேறு விதமான அறிகுறிகள் உண்டாகிறது. சிவந்த கண்கள், தொடர் காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்ற பல அறிகுறிகள் உண்டாகின்றன. பொதுமக்களில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவர்களை அணுகி பரிசோதிக்க வேண்டும். மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் மருத்துகடைகளில் மருந்து மாத்திரைகள் வாங்கி உண்ணுவதை நிறுத்த வேண்டும். இந்த எலிக் காய்ச்சல் நோய்க்கு தேவையான அனைத்து மருந்துகளும், அனைத்து சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.