கோவை: பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் இன்று நடைபெறும் நிலையில், கோவையில் 70 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை.
கோவை: பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் இன்று நடைபெறும் நிலையில், கோவையில் 70 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை.
காங்கிரஸ் கட்சியின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் வியாபாரிகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு தனியார் பேருந்துகள் மற்றும் லாரிகள் இயங்கவில்லை.
ஆம்னி பேருந்துகள்
கோவையில் பாரத் பந்திற்கு ஆதரவாக ஆம்னி பேருந்துகள் இன்று இயக்கப்படாது என கோவை மாவட்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஸ்டீபன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், "கோவையிலிருந்து தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு செல்லும் 350 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எங்கள் துறை மிகுந்த பாதிப்படைந்துள்ளது. இந்த பந்திற்கு எங்கள் முழு ஆதரவு இருக்கும். இரவு நேர ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்." என்றார்.
கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளா மாநிலம் பாலக்காடு, திருச்சூர் போன்ற இடங்களுக்கும், எல்லை பகுதியான வாளையார், வேலந்தாவளம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பந்த் காரணமாக இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கோவை மாநகரில் போக்குவரத்து கழகம் சார்பில் 1,075 பேருந்துகள் இயங்குகின்றன. இவை அனைத்தும் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள் பெரும்பாலும் இயக்கப்படவில்லை சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

கர்நாடக பேருந்துகள்
கோவையிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு 12 பேருந்துகளும், மைசூருக்கு 40 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து கர்நாடக போக்குவரத்துக் கழகம், கோவை மேலாளர் ரவி கூறுகையில், "கோவையிலிருந்து கர்நாடக செல்லும் 52 பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மாலை பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படும்." என்றார்.

15 ஆயிரம் லாரிகள்
பந்திற்கு ஆதரவாக கோவையில் 15 ஆயிரம் லாரிகளும் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகளும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் (தமிழ்நாடு), செயலாளர் தனராஜ் கூறுகையில், "தமிழகத்தில் 4.5 லட்சம் லாரி உரிமையாளர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்பாட்டில் வைக்கப்பட வேண்டும். இந்த விலை உயர்வால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்." என்றார்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக கோவை லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் கோவையில் மட்டும் 15 ஆயிரம் லாரிகள் இயங்கவில்லை.
