கோவை: அரசு டெண்டர் விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி மீது வழக்கு தொடரப் போவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி தெரிவித்தார்.
கோவை: அரசு டெண்டர் விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி மீது வழக்கு தொடரப் போவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி தெரிவித்தார்.
கோவை தெற்கு சட்டமன்ற அ.தி.மு.க., செயல்வீரர் கூட்டம் புலியகுளம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி பேசியதாவது :- நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க., நிச்சயம் வெற்றி பெறும். 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை இந்த ஆட்சியில் கோவைக்கு கொடுத்து இருக்கிறோம். கழகத்தின் பொறுப்பாளர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நமக்கு எதிரி தி.மு.க., தான். டி.டி.வி., தினகரனைப் பொருட்படுத்த தேவையில்லை, என்றார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது :- தனியார் தொலைக்காட்சியில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த தொலைக்காட்சி நிறுவனம் மீது வழக்கு தொடர உள்ளோம். அவர்கள் அளித்த புள்ளி விவரம் தவறானது.
தொழில் செய்வதற்கும், அரசியலுக்கும் தொடர்பில்லை. டெண்டர் விதிமுறைகள் எதுவும் மீறவில்லை. அமைச்சர் பதவியை தவறாகப் பயன்படுத்தப்படவில்லை. மேலும், 20 ஆண்டுகளுக்கு மேலாக அந்த நிறுவனங்கள் ஒப்பந்தத் தொழில் செய்து வருகின்றன. செம்மொழி மாநாட்டின் போதும் கூட ஒப்பந்த பணிகள் எடுத்துச் செய்யப்பட்டது.
மூத்த அமைச்சர்கள் மீது குற்றசாட்டுகளை வைப்பதன் மூலம் வேகமான செயல்பாட்டை முடக்க நினைக்கின்றனர். குட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார் ஆகியோர் பேசியிருக்கின்றனர். வழக்கு விசாரணையில் இருப்பதால் அதைப் பற்றி பேச முடியாது, என்றார்.
மேலும், நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் 7 பேர் விடுதலை குறித்து முடிவு செய்யப்படுமா என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி., வேலுமணி, "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு தைரியமாக பரோல் கொடுத்தது அ.தி.மு.க., அரசு தான். அந்த வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் மறைந்த ஜெயலலிதாவின் நிலைப்பாடு. 7 பேர் விடுதலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்," என்றார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அரசு டெண்டரில் ஈடுபட்டிருந்ததாக செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.