கோவை: வசூல் குறைவு காரணமாக கோவை அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டு வந்த நடத்துனர் இல்லாப் பேருந்துகளை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோவை: வசூல் குறைவு காரணமாக கோவை அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டு வந்த நடத்துனர் இல்லாப் பேருந்துகளை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோவை - மதுரை, கோவை - சேலம், கோவை - திருச்சி, கோவை - பொள்ளாச்சி, கோவை - மேட்டுப்பாளையம், கோவை - திருப்பூர், கோவை - சக்தி என இந்த வழித்தடங்களில் கோவை மண்டலத்தில் 47 பேருந்துகள் நடத்துனர் இல்லாமல் இயக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு போக்குவரத்து கழகம் சார்பில் ஈரோடு - கோவை இடையே 'ஈரோ 100' என்கிற பெயரில் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதில், சேலம், திருச்சி, மதுரை போன்ற பகுதிகளுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. பேருந்துகளின் இருக்கைகளில் முழுவதுமாக நிரம்பி விடுகின்றன. ஆனால், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர் வழித்தடங்களில் பயண இருக்கைகள் முழுவதுமாக நிரம்புவதில்லை. இதனால், வசூல் மிகவும் குறைவாக உள்ளது.
இதன் காரணமாக இந்த வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த நடத்துனர் இல்லா பேருந்துகள் பாதிக்குப் பாதி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, கோவை சார்பில் பல்வேறு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த 47 நடத்துனர் இல்லா பேருந்துகளில், தற்போது 22 பேருந்துகள் குறைக்கப்பட்டு 25 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து கோவை போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை - மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திருப்பூர், சக்தி பகுதிகளுக்கு நடத்துனர் இல்லா பேருந்துகளின் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளன. 54 இருக்கைகள் கொண்ட பேருந்துகளில் காலை, மாலை நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் குறைவான பயணிகள் மட்டுமே பெரும்பாலும் பயணிக்கின்றனர்.
இதனால், இந்த வழித்தடங்களில் நடத்துனர் இல்லா பேருந்துகளை குறைத்துள்ளோம். அதே சமயம், இதே வழித்தடங்கங்களில் நடத்துனருடன் கூடிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன," என்றார்.