திருப்பூர் : மடத்துக்குளம் அருகே 5 மாதம் ஊதியம் வழங்காததைக் கண்டித்து அமராவதி சர்க்கரை ஆலை ஊழியர்கள் குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் : மடத்துக்குளம் அருகே 5 மாதம் ஊதியம் வழங்காததைக் கண்டித்து அமராவதி சர்க்கரை ஆலை ஊழியர்கள் குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மடத்துக்குளம் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் 270 பேருக்கு கடந்த 5 மாதமாக ஊதியம் வழங்காமல் இருப்பதால் ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சர்க்கரை ஆலைக்கு வந்த ஊழியர்கள் ஆலை முன்பு தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆலை நிர்வாகம் செவிசாய்க்காவிட்டால் கஞ்சிதொட்டி திறந்து போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

ஊதியம் வழங்காத காரணத்தால் குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் கட்ட முடியவில்லை. உணவுக்கு கூட பொருட்கள் வாங்க முடியாத நிலையை ஆலை நிர்வாகம் உருவாக்கி விட்டதால், முழுமையாக 5 மாத ஊதியம் வழங்கும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆலையில் கரும்பு கழிவுகளில் இருந்து எடுக்கப்படும் மொலாசீஸ் மூலம் ரூ. 30 கோடிக்கு அதிகமாக வருமானம் கிடைக்க பெறும் நிலையிலும், பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் அரசு காலம் தாழ்த்துவதாக குற்றம்சாட்டுகின்றனர்.
ஓரிரு நாளில் 5 மாத ஊதியத்தை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆலையில் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடுமையான வழியில் போராட்டத்தை தொடர போவதாகவும் தெரிவித்தனர். ஊழியர்களிம் இந்த தொடர் போராட்டத்தால் ஆலை இயக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.