கோவை: கோவை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தக்கோரி, வரும் 17-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக மாநகராட்சி ஊழியரே அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தக்கோரி, வரும் 17-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக மாநகராட்சி ஊழியரே அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் பலர் புகார் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், வடக்கு மண்டலம், 40-வது வார்டில் பணியாற்றி வரும் மாநகராட்சி சுகாதார அலுவலர் கே. பிச்சைமணி, சுகாதாரப்பிரிவில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த ஆவணங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் திரட்டி, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது :- துப்புரவு ஊழியர்களுக்கான பையோ-மெட்ரிக் வருகை பதிவில் பொய்யான ஆவணங்களைக் காட்டி சம்பளத்தொகை கையாடல் செய்வது, கொசு ஒழிப்பு மருந்து கொள்முதலில் முறைகேடு, தகுதியில்லாத ஆட்கள் நியமனம் ஆகிய முறைகேடுகள் மாநகராட்சி சுகாதாரப்பிரிவில் நடைபெற்றுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் இதுகுறித்த ஆவணங்களை சேகரித்து சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு அளித்தேன்.
மனுவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனவரி மாதம் பதிலளித்தது. ஆனால், இன்றுவரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடைபெறவில்லை. எனவே, உடனடியாக விசாரணையை தொடங்கக்கோரி வரும் 17-ம் தேதி உண்ணாவிரதப் போராட்ட இருக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது, என்றார்.