குட்கா முறைகேடு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., ராஜேந்திரன் ஆகியோரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
குட்கா முறைகேடு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., ராஜேந்திரன் ஆகியோரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா வீடுகள் உட்பட தமிழகத்தில் 35 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதனிடையே, தரகர்களாக செயல்பட்ட 2 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ராஜேந்திரன், நந்தகுமார் ஆகியோர், குட்கா வியாபாரி மாதவராவிடமிருந்து பணத்தை வாங்கி அதிகாரிகளிடம் கொடுத்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட தரகர்கள் 2 பேரையும் விசாரணைக்குப் பிறகு டெல்லி அழைத்துச் செல்லவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், கூட்டாளி உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்முருகன், கலால் வரித்துறை அதிகாரி என்.கே.பாண்டியன், ஆகியோரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குட்கா ஊழல் தொடர்பாக இன்று மட்டும் 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. குட்கா ஊழல் தொடர்பாக சென்னை ராயபுரத்தில் காவலர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள இன்ஸ்பெக்டர் சம்பத் என்பவரின் வீட்டிற்கு சி.பி.ஐ., அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், குட்கா முறைகேடு குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில், அவர் பதவியில் இருக்கும் போதே 2-வது முறையாக சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தியிருப்பதால் உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல, டி.ஜி.பி., ராஜேந்திரனையும் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.