கோவை: வால்பாறையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் விரக்தியடைந்த அரசுப் போக்குவரத்து ஊழியர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை: வால்பாறையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் விரக்தியடைந்த அரசுப் போக்குவரத்து ஊழியர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த வேல்முருகன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வால்பாறை கிளையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். தி.மு.க., தொழிற்சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ள இவர் கடந்த மாதம் நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளார்.
இதற்காக அவர் கோவை மேட்டுப்பாளையம் கிளைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, தனது இடமாறுதல் உத்தரவை ரத்து செய்து மீண்டும் வால்பாறையிலேயே பணியாற்ற அனுமதிக்குமாறும், தனது குடும்ப சூழல் மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உதவுமாறும் போக்குவரத்துக்கழக நிர்வாகத்திற்கு பலமுறை வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவரது கோரிக்கை மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இந்த நிலையில், கோவை மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகத்திற்கு இன்று வந்த வேல்முருகன், தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி அலுவலகம் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதைக் கண்ட அங்கிருந்த பணிமனை காவலர்கள் மற்றும் போலீசார் அவரிடம் இருந்த தீப்பெட்டியை பிடுங்கி காப்பாற்றியதுடன், அதிகாரிகளிடம் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.