கோவை: கிருஷ்ணாம்பதி மற்றும் செல்வாம்பதி குளங்களில் மீண்டும் மீண்டும் மர்மமான முறையில் பிணங்கள் மிதந்து வருவது ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கும், செல்வபுரம் போலீசாருக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது.
கோவை: கிருஷ்ணாம்பதி மற்றும் செல்வாம்பதி குளங்களில் மீண்டும் மீண்டும் மர்மமான முறையில் பிணங்கள் மிதந்து வருவது ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கும், செல்வபுரம் போலீசாருக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது.
கோவையில் கொளராம்பதி, நரசாம்பதி கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, முத்தண்னன் குளம், செல்வசிந்தாமணி குளம், கங்கநாரயண சமுத்திரம், உக்கடத்து பெரிய குளம், வாலாங்குளம், குறிச்சி குளம் என 20-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இதில் ஒரு சில குளங்களில் மட்டுமே சுற்றியும் தடுப்புச் சுவர்கள் (கம்பி வேலியில்) அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு குளங்களில் இது போன்ற தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை.
இதன் காரணமாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் குளத்தின் கரைப்பகுதியில் சமூகவிரோதிகள் மது போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தச் செல்கின்றனர். இந்த சூழலில், குளக்கரை ஓரங்களில் இரவு நேரங்களில் யாரும் செல்லக்கூடாது என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், குளத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் ரோந்து செல்லும் போலீசார் அங்கு நிற்கும் நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்துச் சென்று விசாரணை செய்கின்றனர். தொடர் சோதனைகள் இருந்தும் அடிக்கடி குளங்களில் பிணங்கள் மிதப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மிதக்கும் பிணங்கள்
கோவை பனைமரத்தூர் அருகே உள்ள செல்வாம்பதி குளத்தின் ஓரத்தில் கடந்த ஜூலை மாதம் தலை, கைகள், மற்றும் வயிற்றின் கீழ் பகுதிகள் வெட்டப்பட்டு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பெண் உடல் மிதந்து கொண்டிருந்தது. பெண் ஒருவரின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்து விசாரணை நடத்தினர். ஆனால், இந்த கொலையில் இதுவரை துப்பு துலங்கவில்லை.
இதேபோல், கடந்த மாதம் 24-ம் தேதி தொண்டாமுத்தூர் சாலையிலுள்ள கிருஷ்ணாம்பதி குளத்தில் ஆண் சடலம் ஒன்று தலைகுப்புற கிடந்தது. முகம் மீன்களால் அரிக்கப்பட்டதால் சடலம் தொடர்பான அடையாளங்கள் சேகரிக்க முடியாத சூழல் உருவானது. அது யாருடைய சடலம்? என்பது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மீண்டும்
இன்று மீண்டும் கிருஷ்ணாம்பதி குளத்தில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த குளத்தில் சடலங்கள் மிதப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் அச்சம்
கிருஷ்ணாம்பதி மற்றும் செல்வாம்பதி குளத்தைச் சுற்றி பனைமரத்தூர், வீரகேரளம், சீரனாயக்கன்பாளையம், சொக்கம்புதூர், செல்வபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த பகுதிகளை சுற்றியுள்ள குளங்களில் அடிக்கடி மர்மமான முறையில் சடலங்கள் கண்டெடுக்கப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். குளத்தையொட்டியுள்ள சாலையைப் பயன்படுத்த மிகவும் அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து பனைமரத்தூர் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் கூறுகையில், "மர்ம மரணங்களைத் தடுக்க போலீசார் இரவு நேர ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும். அதேபோல இந்தக் குளங்கள் புதர் மண்டிக் கிடப்பதால் குற்றவாளிகள் தங்கும் கூடாரமாக உள்ளது.

இரவு நேரங்களில் பொதுமக்கள் இந்த குளத்தை ஒட்டிய சாலைகளில் செல்ல பயப்படுகின்றனர். அதேபோல இரவு நேரங்களில் சங்கிலி பறிப்பு இந்த பகுதியில் அதிக அளவில் நடைபெறுகிறது.
இந்த குளத்தை ஒட்டிய சாலைகளில் மின்விளக்குகள் அடிக்கடி பழுதாவதால் குற்றவாளிகள், குற்றச் சம்பவங்களில் ஈடுபட ஏதுவாக உள்ளது. ஆகவே, இந்த குளங்களை ஒட்டியுள்ள சந்தேக மரணங்கள் மற்றும் சங்கிலி பறிப்பு போன்ற குற்றங்களை தடுக்க காவல்துறையும் மாநகராட்சியும் இணைந்து செயல்பட வேண்டும்.
ஆங்காங்கே மின்விளக்குகள் பழுது பார்க்கப்பட்டு கண்காணிப்பு காமிராக்களை பொருத்தி போலீஸ் செக்போஸ்ட் அமைத்து பொதுமக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்." என்றார்.
குளங்களில் நடைபெறும் தொடர் மர்ம மரணங்களைக் கட்டுப்படுத்த காவல்துறையும் மாநகராட்சியும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற மர்ம மரணங்களைக் கட்டுப்படுத்த முடியும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குற்றங்களை கட்டுப்படுத்த அரசுத் துறை நிர்வாகம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.