கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகத்திற்கு ரோட்டரி கிளப் சார்பாக 2018-க்கான தொழில் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகத்திற்கு ரோட்டரி கிளப் சார்பாக 2018-க்கான தொழில் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகம் நாட்டின் தனித்துவம் வாய்ந்த அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகம் கடந்த 1918-ல் ஹேமில்டன் காவலர் கூட்டுறவு விடுதி சங்கமாக இருந்தது.
பின்னர், பல ஆண்டுகளாக பயனற்று பாழடைந்து கிடந்தது. தொடர்ந்து, முன்னாள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜின் முயற்சியால் மறு சீரமைக்கப்பட்டு காவலர் அருங்காட்சியகமாக உருவானது. கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக முதலமைச்சர் இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.

இந்த அருங்காட்சியகத்தில் பணி ஆயுதங்கள், விருதுகள், பதக்கங்கள், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், காவலர்களின் பதவிகளை அறியும் விதமாக காவலர் சீருடைகள், வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க பயன்படும் உபகரணங்கள் என பல வகையான ஆயுதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.,க்கு அப்போதைய ரோட்டரி கிளப் கவர்னர் வரதராஜ் வழங்கிய வெள்ளி வாள் இன்றும் பாதுகாப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல விடுதலைப் புலிகள் பயன்படுத்திய நீர் மூழ்கிக் கப்பலும் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இப்படி சிறப்பு வாய்ந்த இந்த அருங்காட்சியகத்தை பெருமைப்படுத்தும் விதமாக ரோட்டரி கிளப் சார்பாக தொழில் சிறப்பு விருது வழங்கப்பட்டது. நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் (போக்குவரத்து) துணை ஆணையாளர் சுஜித்குமார் இந்த விருதினை பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப்பை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.