கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட குளங்களுக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பறவைகள் ஒருசில சமூக விரோதிகளால் தொடர்ந்து வேட்டையாடப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட குளங்களுக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பறவைகள் ஒருசில சமூக விரோதிகளால் தொடர்ந்து வேட்டையாடப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களில் உள்ளூரில் இருந்து மட்டுமின்றி, வெளியூர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பறவைகள் வந்து செல்கின்றன. இந்தப் பறவைகளை அங்கு மீன்பிடிக்க வரும் சில மீனவர்கள் மற்றும் ஒருசில சமூக விரோதிகள் வேட்டையாடி வருகின்றனர். இதனால், குளங்களுக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே, குளங்களுக்கு வரும் பறவைகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, உக்கடம் பெரிய குளத்தில் தலையில் அடிபட்ட நிலையில் பெலிகான் பறவை ஒன்று மீட்கப்பட்டது. அரசு கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், காந்திபுரத்தில் உள்ள வ.உ.சி., பூங்காவில் விடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ஓசை அமைப்பைச் சேர்ந்த கே. சையத் கூறியதாவது :- உள்ளூர் மீனவர் ஒருவர் அளித்த தகவலின் பேரில் உக்கடம் பெரிய குளத்திற்கு சென்றோம். அங்கு, யாரேனும் அருகில் சென்றாலும் எந்தவித அசைவின்றி பெலிகான் பறவை அமர்ந்திருந்தது. அப்போது, காயமடைந்திருப்பதை உணர்ந்த நாங்கள், அதனை மீட்டு, டவுன்ஹால் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம். பின்னர், சிகிச்சைக்குப் பிறகு, வ.உ.சி., பூங்காவில் கொண்டு சென்று விட்டோம். இந்த பெலிகான் பறவை வேட்டையாடப்பட்ட போது காயத்துடன் தப்பியதாக மருத்துவர் தெரிவித்தார், எனக் கூறினார்.
இதனிடையே, இதேபோல, மேலும் ஒரு பெலிகான் பறவை உக்கடம் பெரிய குளத்தில் காயத்துடன் சுற்றித் திரிவதாக மீனவர் ஒருவர் கூறினார். தொடர்ந்து, கோவை மாநகராட்சிக்குட்பட்ட சிங்காநல்நூர், சூலூர், வேடப்பட்டி மற்றும் செங்குளம் ஆகிய குளங்களுக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பறவைகள் ஒருசில சமூக விரோதிகளால் வேட்டையாடப்பட்டு வரும் சம்பவம் அரங்கேறி வருவதை வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
"உள்ளூர் மீனவர்களைக் கொண்டு குழு அமைத்து, ஏதேனும் வேட்டையாடுபவர்களின் நடமாட்டம் இருக்கிறதா எனக் கண்காணிக்க வேண்டும். இந்தக் குழுக்கள் காலை, மாலை என இருவேளைகளில் பறவைகளின் நடமாட்டத்தை கண்காணித்தால், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும்," இவ்வாறு ஓசை அமைப்பைச் சேர்ந்த சையத் யோசனை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கோவை மாவட்ட வன அதிகாரி எஸ். சுரேஷ் கூறுகையில், "வன பாதுகாப்பு துறையால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் மூலம் கோவையில் உள்ள குளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதோடு, புறநகர் மாவட்டங்களில் இருக்கும் குளங்களிலும் இந்தக் குழு திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்," என்றார்.