நீலகிரி: நீலகிரியில் அடியாட்களை வைத்து கல்லூரி நிர்வாகம் மிரட்டுவதாகக் கூறி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி: நீலகிரியில் அடியாட்களை வைத்து கல்லூரி நிர்வாகம் மிரட்டுவதாகக் கூறி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் கேத்தியில் சி.எஸ்.ஐ தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் செயலராக சார்லஸ் சாம்ராஜ் என்பவர் உள்ளார். கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு கடந்த நான்கு மாத ஊதியத்தையும், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையையும் வழங்காத காரணத்தால், அதனை வழங்க வேண்டி சார்லஸ் சாம்ராஜிடம் கேட்டுள்ளனர்.
இதனால், அடையாளம் தெரியாத 40-க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் கல்லூரிக்கு வந்த சார்லஸ் சாம்ராஜ், மாணவர்களிடமும், பேராசிரியர்களிடமும் வன்முறையைத் தூண்டும் விதமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து, செயலரைக் கண்டித்து கல்லூரி அலுவலகத்தை முற்றுகையிட்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பி திடீர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, அங்கு சென்ற காவல்துறையினர், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றச்சாட்டுகளை முழுவதுமாய் மறுத்த நிர்வாகம் பின்னர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என போலீசார் கூறியதை தொடர்ந்து போராட்டம் கை விடப்பட்டது.