கோவை: இளம்பெண் சோபியாவின் விமர்சனத்திற்குப் பதில் சொல்லாமல், பழி வாங்கும் நோக்கில் தீவிரவாதிகளுடன் தொடர்பு எனக் கூறி புகார் அளிப்பது ஒரு மாநில தலைவருக்கு அழகல்ல என சி.பி.எம்., அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை: இளம்பெண் சோபியாவின் விமர்சனத்திற்குப் பதில் சொல்லாமல், பழி வாங்கும் நோக்கில் தீவிரவாதிகளுடன் தொடர்பு எனக் கூறி புகார் அளிப்பது ஒரு மாநில தலைவருக்கு அழகல்ல என சி.பி.எம்., அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை சி.பி.எம்., அலுவலகத்தில் அக்கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது :- கோவை மாநகராட்சிக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்க சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஓப்பந்த்த்தை கண்டித்து வரும் 18-ம் தேதி சி.பி.எம்., கட்சியின் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.
ஒப்பந்த நகலை மாநகராட்சி ஸ்கேன் செய்து மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். உடனடியாக யாரும் படித்து விடக்கூடாது என்பதற்காகவே ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.
சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் பொது மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும். வீட்டின் பரப்பளவு அடிப்படையில் தண்ணீர் வழங்குவது, பொது குழாய்கள் மூடல், வைப்புத் தொகை உயர்வு போன்றவையால் பாதிப்பு ஏற்படும்.
சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் (22.11) கட்டுமான செலவு கூடுதலாக செலவானால் அதை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரூ. 2,975 கோடி 25 ஆண்டுகள் பராமரிப்பிற்காக வழங்கப்படும் நிலையில், சூயஸ் நிறுவனம் கோரினால் கட்டணம் மாற்றி உயர்த்திக் கொடுக்கப்படும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிவியாவில் சூயஸ் நிறுவனத்தால் போடப்பட்ட ஒப்பந்தம் மக்கள் போராட்டத்தால் ரத்து செய்யப்பட்டது.
மேலும், கோவை தேசிய பஞ்சாலை தொழிலாளர்கள் பிரச்சினையைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மாணவி சோபியாவை பழி வாங்குவதற்காக கைது போன்ற நடவடிக்கைகள் எடுப்பது சரியல்ல.
மனித உரிமையைப் பறிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் செயல்படக் கூடாது. ஆராய்ச்சி மாணவி முழக்கம் எழுப்பியதற்காக, சக பயணிகள் கோரிக்கை விடுத்தையும் ஏற்காமல் தமிழிசை புகார் அளித்துள்ளார்.
குறிப்பாக, தந்தை கொடுத்த புகாரின்மேல் காவல்துறை ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை..?. தலைவர் பொறுப்பில் இருப்பவர்கள் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.
விமர்சனத்திற்கு பதில் சொல்லாமல், பழி வாங்கும் நோக்கில் தீவிரவாதிகளுடன் தொடர்பு என புகார் அளிப்பது மாநில தலைவருக்கு அழகல்ல. நிபந்தனை ஜாமீன் என்பதை தவிர்த்து மாணவி சோபியா மீதான வழக்கினை திரும்பப் பெற வேண்டும். மாணவி சோபியாவின் ஆராய்ச்சி படிப்பு தொடர வழிவகை செய்ய வேண்டும், இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டார்.