கோவை: கோவையில் நடைபெற உள்ள மேற்குத்தொடர்ச்சி மலை மாநாட்டிற்கு ஆறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களை அழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவையில் நடைபெற உள்ள மேற்குத்தொடர்ச்சி மலை மாநாட்டிற்கு ஆறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களை அழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கோவை அண்ணாமலை அரங்கத்தில் அந்த அமைப்பினர் நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த ஜனார்த்தனா கூறுகையில், "ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் வரும் நவம்பர் மாதம் 30-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 2-ம் தேதி வரை மூன்று நாட்கள் மேற்குத்தொடர்ச்சி மலை மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டிற்கு மேற்குத்தொடர்ச்சி மலை அமைந்துள்ள மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஆறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களையும் அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டின் இறுதி நாளில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரையும் அழைக்க உள்ளோம்.
மேற்குத்தொடர்ச்சி மலையின் பாதுகாப்புக்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மாதவ் காடில் மற்றும் கஸ்தூரிரங்கன் ஆகிய இருவர் சமீபத்தில் மத்திய அரசுக்கு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், மலைகள் உள்ள பகுதிகளில் 66 சதவீத காடுகள் இருக்க வேண்டும் என்றும், ஆனால், தற்போது 10 சதவீத காடுகளே உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், காடுகள் அழிக்கப்படுவதே தொடரும் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுக்குக் காரணம் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்." என்றார்.
இது குறித்து ஓசை அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ் கூறுகையில், " இந்த மாநாட்டில் வீதி நாடகங்கள் மற்றும் பல்வேறு போட்டிகளையும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்." என்றார்.