கோவை : தடாகம் அருகே நீண்ட ஆண்டுகளாக அரங்கேறி வந்த செம்மண் கொள்ளைக்கு எதிரான மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தொடங்கியுள்ளதால், செம்மண் கொள்ளையர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
கோவை : தடாகம் அருகே நீண்ட ஆண்டுகளாக அரங்கேறி வந்த செம்மண் கொள்ளைக்கு எதிரான மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தொடங்கியுள்ளதால், செம்மண் கொள்ளையர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், கணுவாய், வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து செம்மண் கொள்ளை நடைபெற்று வருவதைக் கடந்த ஆக.,22-ம் தேதி சிம்பிளிசிட்டி செய்தி தொகுப்பு அம்பலப்படுத்தியது. இதற்காக ஆனைகட்டி சாலையில் உள்ள மலையடிவாரங்களில் 2 நாட்களாக இந்த செம்மண் கொள்ளையை தடுக்கும் முயற்சியில், அந்தப் பகுதியைச் சேர்ந்த சில சமூக ஆர்வலர்களின் துணையுடன் சுற்றித்திரிந்து லாரி, லாரியாக அள்ளப்படும் செம்மண் கொள்ளையை ஆதாரத்துடன் செய்தியாக வெளியிட்டோம்.
இயற்கை வளங்களுக்கும், அந்த மலைப் பகுதிகளில் வாழும் விலங்குகளுக்கும், இதனைச் சார்ந்திருக்கும் மனிதனுக்கும் துன்பத்தை ஏற்படுத்தும் இதுமாதிரியான செம்மண் கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து மேற்கு தொடர்ச்சி மலையின் வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருந்தோம்.
இந்த நிலையில், நேற்று மாலை கனிமவளத்துறை இணை இயக்குநர் கலைச்செல்வன் தலைமையில் அதிகாரிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆனைகட்டி சாலையில் சட்டவிரோமாக செம்மண் அள்ளிச் சென்ற டிப்பர் லாரியை (TN38 CL 5202) அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். இந்த லாரியில் மொத்தம் 3 யூனிட் செம்மண் இருந்தது.
இதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் தங்கராஜை கைது செய்து, தடாகம் காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். முதற்கட்டமாக, லாரிகளில் விதியை மீறி செம்மண் அள்ளிச் சென்றவர்கள் மீது அபராதம் வசூல் செய்யப்படுகிறது. தொடர்ந்து இதுபோன்ற கொள்ளையில் ஈடுபட்டு வந்தால், குண்டர் சட்டம் பாயும் என கனிம வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீண்ட ஆண்டுகளாக எந்தவித தடையுமின்றி அரங்கேற்றி வந்த இந்த சுதந்திரமான மணல் திருட்டுக்கு தற்போது கடிவாளம் போடும்படியான நடவடிக்கைகளால் செம்மண் கொள்ளையர்கள் திகைத்துப் போயுள்ளனர். இந்த நடவடிக்கை தற்காலிகமானதாக மட்டுமில்லாமல், கனிம வளங்களைப் பாதுகாக்கும் செயலில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நமது சிம்ப்ளிசிட்டியின் கோரிக்கையாக இருக்கிறது.