கோவை: கோவையில் அரசுக்கு செலுத்த வேண்டிய சந்தா தொகையை செலுத்தாமல் செயல்பட்டு வந்த 76 டாஸ்மாக் பார்களுக்கு கலால் வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.
கோவை: கோவையில் அரசுக்கு செலுத்த வேண்டிய சந்தா தொகையை செலுத்தாமல் செயல்பட்டு வந்த 76 டாஸ்மாக் பார்களுக்கு கலால் வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.
மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்கள் இயங்கி வருகின்றன. மதுபான கடைகளுடன் இயங்கி வரும் இந்த பார்கள் (மதுபானக் கூடங்கள்) மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும். ஆனால், கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பார்கள் கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாகக் கட்டணத்தை செலுத்தாமல் இருந்து வந்துள்ளன.

இதையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனின் உத்தரவின் பேரில், அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் முறைகேடாக செயல்பட்டு வந்த சுமார் 76 டாஸ்மாக் பார்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றிற்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவை மாநகராட்சிக்குட்பட்ட காந்திபுரம் பகுதியிலுள்ள டாஸ்மாக் பாருக்கு கலால் வரித்துறை துணை ஆணையர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் சீல் வைத்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் துணை ஆணையர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், "கோவை மாவட்டம் முழுவதும் இதுபோன்று முறைகேடாக இயங்கி வரும் மதுபானக் கூடங்களுக்கு சீல் வைக்க 6 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அக்குழுவினர் இன்று ஒரே நாளில் அனைத்து பகுதிகளிலும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை மூன்று தினங்களுக்குள் அபராத தொகையுடன் சேர்த்து செலுத்தும் பட்சத்தில், தொடர்ந்து பார்கள் இயங்க அனுமதி அளிக்கப்படும்," என்றார்.