கோவை: பருவமழையின் காரணமாக கோவையில் உள்ள குளங்கள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், பொதுமக்கள் குளங்களில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என குளக்கரைகளில் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
கோவை: பருவமழையின் காரணமாக கோவையில் உள்ள குளங்கள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், பொதுமக்கள் குளங்களில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என குளக்கரைகளில் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை கோவை மாவட்டத்தில் பரவலாக பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. குறிப்பாக, மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள எட்டு குளங்களும் நீர் நிறைந்து காணப்படுகிறது. இதனால் பலவிதமான பறவை இனங்கள் குளத்திற்கு வந்து செல்கின்றன. குளத்தில் உள்ள மீன் வளத்தைப் பெருக்குவதற்காக மீனவர்கள் சார்பில் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.
ததும்பும் நீரில், பறவைகள் மீன்களை கொத்திச் செல்லும் காட்சியைப் பார்ப்பதற்காக பொதுமக்கள் தொடர்ந்து குளக்கரைகளில் குவிந்து வருகின்றனர். மேலும் ஆபத்தை உணராமல் குளக்கரையில் நின்று இளைஞர்கள் செல்ஃபி எடுக்கின்றனர்.

இந்நிலையில், குளங்களில் இறங்கவோ, குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ கூடாது என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது காவல்துறையைக் கொண்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
12 வருடங்களுக்குப் பிறகு...
தொடர்மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட குளங்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, 12 வருடங்களுக்குப் பிறகு வெள்ளலூர் குளம் நிரம்பியுள்ளதால், அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதுகுறித்து வெள்ளலூர் குளத்தில் தொடர் களப்பணியில் ஈடுபட்டு வந்த கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறியதாவது :- கடந்த 25 வருடங்களில், இரண்டாவது முறையாக வெள்ளலூர் குளம் நிரம்பியுள்ளது. இதற்கு முன் 2006-ம் ஆண்டு முழு கொள்ளளவை எட்டியது. வெள்ளலூர் ராஜவாய்க்காலின் தடுப்பணைகளில் நீர் செல்ல முடியாத அளவிற்கு பிளாஸ்டிக் அடைப்புகள் ஏற்பட்டிருந்தன. அவற்றை தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களோடு இணைந்து தொடர் களப்பணி செய்து சுத்தம் செய்தோம். அதற்கு தற்போது பலன்கிடைத்து வெள்ளலூர் குளம்நீர் நிறைந்து காணப்படுகிறது.
இதனால், பல்வேறு வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன. நிலத்தடி நீர்மட்டம் பலமடங்கு உயரும். எனவே, குளத்து நீரை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களையோ, குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகளை குளத்தில் கொட்டுவதை பொதுமக்கள் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், விநாயகர் சதுர்த்திக்கு கரைக்கப்படும் சிலைகளில் பிளாஸ்டர் ஆஃப் பெரிஸ், பிளாஸ்டிக், நச்சுத்தன்மை உடைய வண்ணப்பூச்சுகள் போன்ற நீரை மாசுபடுத்தும் கலவைகள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆராய்ந்து, அவற்றை குளத்தில் கரைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், என்றார்.