கேரளா: வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளாவில் சரியான நேரத்தில் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு வெற்றிகரமாக குழந்தை பிறந்த சம்பவத்தால், மீட்பு குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
கேரளா: வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளாவில் சரியான நேரத்தில் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு வெற்றிகரமாக குழந்தை பிறந்த சம்பவத்தால், மீட்பு குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் கனமழையினால் கேரள மாநிலமே வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 167 பேர் உயிரிழந்தனர். சுமார் 2.25 லட்சம் பொதுமக்கள், தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள 1,568 சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில், திருச்சூர், எர்ணாகுளத்தில் மட்டும் 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து அரசு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
பெரும்பாலான பகுதிகளில் வீடுகள் நீரில் மூழ்கிக் கிடப்பதால், பொதுமக்கள் மொட்டை மாடிகளில் குடியேறியுள்ளனர். அவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பதற்கும் பணியில் 24 மணிநேரமும் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆலுவா பகுதியில் சாஜிதா ஜேபில் (25) என்ற கர்ப்பிணி பெண் பிரசவ காலம் நெருங்கிய நிலையில், வெள்ளத்தில் சிக்கித் தவித்து வந்தார். இது குறித்து தகவலறிந்து அப்பகுதிக்குச் சென்ற மீட்புப் படையினர், சாஜிதா இருந்த வீட்டின் மேற்புறத்தில் ஹெலிகாப்டரை நிறுத்தி, ஏணியின் மூலம் அவரை பத்திரமாக மீட்டனர். இந்த மீட்பு பணியின் போது, கர்ப்பிணியான சாஜிதாவின் வயிற்றில் குழந்தை இருக்கும் தண்ணீர் குடம் உடைந்தது. இதனால், அவருக்கு வலி ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, துரிதமாக செயல்பட்ட மீட்புக் குழுவினர், அவரை மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இறுதியில், வெற்றிகரமான சிகிச்சையால், சாஜிதாவுக்கு ஆண்குழந்தை பிறந்தது. தற்போது, தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பல்வேறு இடர்பாடுகளுக்கு நடுவே, கர்ப்பிணி பெண்ணையும், அவரது குழந்தையையும் காப்பாற்றிய மீட்புக் குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.