கோவை: கோவையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகள் மட்டுமின்றி, நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரயில்வே தரைப்பாலங்களின் நிலை படுமோசமாக உள்ளன.
கோவை: கோவையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகள் மட்டுமின்றி, நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரயில்வே தரைப்பாலங்களின் நிலை படுமோசமாக உள்ளன.

குறிப்பாக, ஆவாரம்பாளையத்தை அடுத்துள்ள ஷோபா நகர் பகுதியில் உள்ள ரயில்வே தரைப்பாலம் தொடர்மழை காரணமாக நீச்சல் குளம் போல் மாறியுள்ளது. முறையான வடிகால் வசதியில்லாததால், மழைநீர் பாலத்தில் தேங்கியுள்ளதோடு, சாலையின் தார் தளங்கள் பெயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தான பள்ளங்களாக இவை உருவாகியுள்ளன.

"தரைப்பாலத்தில் மழைநீர் தேங்கியிருப்பதால், தொடர்ந்து வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. இப்பகுதியைக் கடக்கும் வாகனங்கள் மிகவும் மெதுவாக செல்வதால், இந்த சாலையில் தினமும் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் எழுப்பும் சத்தத்தால் சாலையை ஒட்டி வசிக்கும் மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பல்வேறு குறுந்தொழிற்கூடங்கள் இங்கு உள்ளதால், கனரக வாகனங்கள் சென்று வரும் அளவிற்கு தரமான சாலை மற்றும் தரைப்பாலத்தின் தளங்கள் அமைத்திட வேண்டும்," என்று கேட்டுக்கொண்டார் ஓர் குடியிருப்புவாசி.

ஆவாரம்பாளையத்தில் இருந்து கணபதி நோக்கி செல்லும் சாலையில் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், சத்தி சாலைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஷோபா நகர் சாலையில் உள்ள இந்த தரைப்பாலத்தின் வழியாகவே மாற்றிவிடப்படுகிறது. இந்நிலையில் இந்த பகுதியின் சாலை மற்றும் தரைப்பாலம் பராமரிக்கப்படாததால் இப்பகுதியை கடப்பதற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "நகரில் உள்ள ரயில்வே தரைப்பாலங்கள் அனைத்தும் ரயில்வே துறையால் கட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஷோபா நகரில் உள்ள இந்தப் பாலத்தை ரயில்வே துறையினர் முறையாக பராமரிப்பதில்லை. மழைநீர் தேங்கி நிற்கும் சமயங்களில் மாநகராட்சி சார்பில் மோட்டார் பம்புகள் வைத்து வெள்ளநீரை வெளியேற்றி வருகிறோம். சேதமடைந்த தார் சாலைகளில் விரைவில் பேட்ச்வொர்க் செய்யப்படும்," என்றனர்.